இங்கிலாந்தில் இன்று பொதுத் தேர்தல் : விறுவிறுப்பான வாக்குப்பதிவு
5/7/2025 3:05:33 PM
லண்டன்: இங்கிலாந்தில் இன்று பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. காலையில் வாக்குப்பதிவு விறுவிறுப்புடன் தொடங்கியது. இங்கிலாந்தில் பொதுத் தேர்தல் இன்று காலை 6 மணிக்கு தொடங்கியது. வாக்குப்பதிவு துவங்கியது முதல் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். இந்த தேர்தலில் 4.50 கோடி பேர் ஓட்டுப்போடுகின்றனர். இங்கு மொத்தம் 650 தொகுதிகள் உள்ளன. தேர்தலையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் ஆளும், எதிர்க்கட்சி இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் சார்பில் தற்போதைய பிரதமர் டேவிட் கேமரூனும், பிரதான எதிர்க்கட்சியான லேபர் கட்சி சார்பில் எட்மிலிபேண்ட் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காது கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. இதுவரை 7 முறை கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளன.
இதில் கன்சர்வேட்டிவ், லேபர் கட்சிகள் சம பலத்துடன் இருப்பதாக 3 கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. கன்சர்வேட்டிவ் சுமார் 1 சதவீதம் முன்னிலை வகிப்பதாக 3 கருத்து கணிப்புகளும், சுமார் 2 சதவீதம் லேபர் கட்சி முன்னிலை வகிப்பதாக ஒரு கருத்துக்கணிப்பும் ஆருடம் கூறியுள்ளன.மேலும், ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு 284 இடங்கள் வரை கிடைக்கும் எனவும், லேபர் கட்சிக்கு 263 இடங்கள் வரையும், ஸ்காட்லாந்து தசேிய கட்சிக்கு 48, சுதந்திர ஜனநாயக கட்சிக்கு 31 இடங்கள் வரை கிடைக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.யார் வெற்றிபெற்றாலும் வித்தியாசம் குறைந்தளவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆட்சி அமைக்க போதிய இடங்கள் கிடைக்காதபட்சத்தில் சிறிய கட்சிகளின் ஆதரவைபெற ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.சுதந்திர ஜனநாயக கட்சியின் ஆதரவை தற்போதைய பிரதமர் டேவிட் கேமரூன் பெறுவார் என தெரிகிறது.
கடந்த முறை இந்த கட்சியின் ஆதரவை அவர் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல், லேபர் கட்சி தலைவரும் மற்ற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க முனைப்பு காட்டுவர்.கடும்போட்டி நிலவி வரும் நிலையில், பிரதமர் டேவிட் கேமரூன், இந்தியர்களின் ஆதரவை பெறுவதில் தீவிரம் காட்டினார். ஏனென்றால் இங்கிலாந்தில் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் வசிக்கின்றனர். வெற்றியை தீர்மானிக்கும் காரணியாக இந்தியர்கள் உள்ளனர். நிலையான, உறுதியான ஆட்சியை கன்சர்வேடிவ் கட்சியால் மட்டுமே வழங்க முடியும் என தெரிவித்துள்ள கேமரூன், வருமான வரி குறைப்பு உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்துள்ளார்.இந்நிலையில், இன்று நடைபெறும் வாக்குப்பதிவின் முடிவுகள் நாளை வெளியாகிறது. யார் ஆட்சி அமைப்பார்கள் என அப்போது தெரியவரும்.