தொழில்முனைவோர் பயிற்சி திட்டம் : அமெரிக்கா பயணத்திற்கு தமிழக மாணவி தேர்வு
5/1/2025 2:53:07 PM
நாகர்கோவில்: குமரி மாவட்டம், இரவிபுதூர்கடையை சேர்ந்தவர் மாஷா நஸீம். பொறியியல் மேற்படிப்பு பயின்று வரும் இவர் அமெரிக்காவில் நடைபெறவுள்ள சர்வதேச அளவிலான தொழில் முனைவோர் பயிற்சி திட்டத்திற்காக தேர்வு பெற்றுள்ளார். இந்தியாவின் சார்பில் ர்ந்தெடுக்கப்பட்டுள்ள 8 பேர் குழுவில் ஒருவராக இவர் தேர்வு பெற்றுள்ளார். கலிபோர்னியாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிற மோத்வனி ஜடேஜா பவுண்டேஷன் என்ற அமைப்பு, ராஜீவ் பெல்லோஷிப் என்ற திட்டத்தினை ஆண்டு தோறும் நடத்தி வருகிறது. பல்வேறு நாடுகளிலிருந்து சாதனையாளர்களை தேர்வு செய்து அவர்களுக்கு உலக தரத்தில் தொழில் முனைவோர் பயிற்சி அளிப்பது இந்த திட்டத்தின் நோக்கம். அமெரிக்காவின் சிலிக்கான் வேலியில் அமைந்துள்ள கூகுள், பேஸ்புக், இபே, ஆட்டோ டெஸ்க், டுவிட்டர் போன்ற நிறுவனங்களில் மே 10 முதல் 30 வரை இந்த பயிற்சி நடைபெறுகிறது. இந்த நிறுவனத்தின் தலைவர்களை சந்தித்து பேசும் அரிய வாய்ப்பும் இந்த திட்டத்தில் உள்ளது.
மாஷா நாகர்கோவிலில் ‘மாஷா ஆக்கத்திறன் மையம்’ என்ற சேவை அமைப்பையும் நடத்தி வருகிறார். இந்த ஆக்கத்திறன் மையத்தில் பயிற்சி பெற்ற பள்ளி மாணவர்களில் 4 பேர் அறிவியல் படைப்பாற்றல் போட்டிகளில் தேசிய விருதுகளை பெற்றுள்ளனர். இது தொடர்பாக மாஷா கூறுகையில், ‘எனது இந்த ஆக்கத்திறன் மையத்தினை தேசிய அளவில் கொண்டு செல்லும் முயற்சிக்கு இந்த சிலிக்கான் வேலி பயிற்சி திட்டம் பேருதவியாக அமையும். இதன் மூலம் மணவர்களிடையே அறிவியல் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் எனது முயற்சி மேலும் சிறப்படையும்’ என்றார். மாஷா, தனது 9 வயதில் அறிவியல் மாடல்களை உருவாக்க தொடங்கியவர். இதுவரை 12 தொடர் கண்டு பிடிப்புகளை நிகழ்த்தி, அதற்காக 2 சர்வதேச விருது, 5 தேசியவிருது, 2 ஜனாதிபதி விருதுகளை பெற்றுள்ளார். அப்போதைய ஜனாதிபதி அப்துல்கலாம், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பிரதமர் நரேந்திர மோடி ஆகிய தலைவர்களிடம் தனது கருவி குறித்து செயல்விளக்கம் செய்து காண்பித்து பரிசு, பாராட்டுகள் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.