சென்னையில் மே தின கொண்டாட்டம் : அனைத்து கட்சிகள் பேரணி, சிந்தாதிரிப்பேட்டையில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
5/1/2025 2:51:41 PM
சென்னை: தமிழகம் முழுவதும் மே தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னையில் அனைத்துக் கட்சிகளின் சார்பில் மே தின பேரணி இன்று காலை நடந்தது. திமுக சார்பில் நடந்த விழாவில் பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மே தினத்தை முன்னிட்டு திமுக தொழிற்சங்கம் சார்பில் மே தினம் இன்று கொண்டாடப்பட்டது. அதைத் தொடர்ந்து சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின நினைவுச் சின்னம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு காலை 9 மணியளவில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வந்தார். அவருக்கு தொழிலாளர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஏராளமான தொழிலாளர்கள் கொடிகளை ஏந்தி ஸ்டாலினை வரவேற்றனர்.
பின்னர் மே தின சின்னத்துக்கு மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் திமுக தொழிலாளர் அணி செயலாளர் ரத்தினசபாபதி, தொமுச பேரவை தலைவர் நடராஜன், பொதுச்செயலாளர் மு.சண்முகம், நிர்வாகிகள் நடராஜன், செல்வராஜ் பாலு, திமுக துணை பொதுச்செயாளர் துரைசாமி, திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன்
தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சி முருகன், சதாசிவம், கு.க.செல்வம், இளைஞரணி துணை செயலாளர் ஆர்.டிசேகர். நிர்வாகிகள் சிற்றரசு, மகேஷ், பிரபாகரராஜா மற்றும் கொல்லாபுரம் ராஜேந்திரன், குப்புசாமி ராஜா மற்றும் மாவட்ட செயலாளர்கள் சேகர்பாபு, சுதர்சணம், மா.சுப்பிரமணியன், முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, கிரிராஜன், பரந்தாமன், ரங்கநாதன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தொழிலாளர்கள் ரத்தம் சிந்தி போராடி உரிமைகளை பெற்றனர். அதை தான் நாம் மே தினமாக ஆண்டுதோறும் கொண்டாடுகிறோம். திமுக ஆட்சியில் தொழிலாளர்களுக்கு ஏராளமான நன்மைகள் செய்யப்பட்டன. தொழிலாளர்கள் நலனுக்காக தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டது. ஊதியத்துடன் விடுமுறை வழங்கப்பட்டது. மே தினத்தை தேசிய விடுமுறையாக அறிவிக்க திமுக தலைவர் கருணாநிதி ஏற்பாடு செய்தார். சென்னையில் மே தினத்தை முன்னிட்டு நினைவு சின்னம் அமைத்து நேப்பியர் பூங்காவுக்கு மே தின பூங்கா என கருணாநிதி பெயர் சூட்டினார்.
மே தின சின்னம் அமைப்பதில் எதிர்கட்சிகளின் ஆலோசனைகள் ஏற்றார். தொழிலாளர்களுக்கு 20 சதவீத போனஸ் திமுக ஆட்சியில் தான் வழங்கப்பட்டது. தொழிலாளர் நல வாரியங்கள் அமைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டன. ஆனால் அதிமுக அரசு அந்த வாரியங்களை முடக்கியது. தேர்தல் அறிக்கையில் கூறியதை போல் அதிமுக அரசு தொழிலாளர்களுக்கு நன்மைகள் செய்யவில்லை. புதிய தொழிற்சாலைகள் கொண்டுவராமல் இருக்கும் தொழிற்சாலைகளையும் மூடுகின்றனர். சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டை கூட நடத்த முடியவில்லை. இந்த அரசு தொழிலாளர் நலனில் எந்த அக்கறையும் காட்டவில்லை. மவுலிவாக்கத்தில் நடந்த கட்டிட விபத்தில் ஏராளமான தொழிலாளர்கள் பலியானார்கள். ராணி பேட்டையில் தோல் தொழிற்சாலை விபத்தில் பல தொழிலாளர்கள் உயிரிழந்தனர். அண்மையில் ஆந்திராவில் 20 தமிழக தொழிலாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். தொழிலாளர் நலனுக்காக இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த மே தின நாளில் நாம் சபதம் ஏற்போம். அடுத்த மே தினத்தில் திமுக ஆட்சி கருணாநிதி தலைமையில் அமையும். அதன் மூலம் தமிழகத்தின் நலன் காக்கப்படும். அதற்கு நாம் இந்த மே தினத்தில் சபதம் ஏற்போம்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார். அதேபோல, அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின பேரணி சென்னை வள்ளூவர்கோட்டத்தில் இன்று காலை நடந்தது. அமைச்சர் வளர்மதி பேரணியை தொடங்கி வைத்தார். பேரணியில் தொழிற்சங்க மாநில செயலாளர் எம்எல்ஏ சின்னச்சாமி உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். பேரணி நுங்கம்பாக்கம் பாம்குரோவ் ஓட்டல் அருகே நிறைவடைந்தது. பின்னர் வளர்மதி தொழிலாளர்கள் மத்தியில் பேசினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் தி.நகரில் உள்ள கட்சியின் மாநில அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டி.கே.ரங்கராஜன் எம்பி மே தின கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் மே தின கொடியை ஏற்றி வைத்து பேசினார்.சிஐடியு மாநில செயலாளர் சவுந்திரராஜன் எம்எல்ஏ, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் தலைமையில் ஓட்டேரி சமாதி தெருவில் மே தின பொதுக் கூட்டம் நடக்கிறது. முன்னதாக மாலை 4 மணிக்கு ஓட்டேரி மேம்பாலம் அருகில் இருந்து தொழிலாளர்கள் பேரணியும் நடைபெறுகிறது.