மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் மதுரையில் கோலாகலம்
4/30/2015 3:44:28 PM
மதுரை: மதுரையில் இன்று காலை நடந்த மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் உச்சக்கட்ட முத்திரை விழாவான மீனாட்சி திருக்கல்யாணத்தை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு பரவசம் அடைந்தனர்.மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா ஏப்.21ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் தினமும் காலை, இரவு மாசி வீதிகளில் பல்வேறு வாகனங்களில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பட்டாபிஷேகம், எட்டு திசை சென்று போரிடும் திக்கு விஜயம் நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து இன்று திருக்கல்யாணம் நடந்தது.அதிகாலை 4 மணிக்கு கோயில் சேர்த்தி மண்டபத்தில் மீனாட்சி, சுந்தரேஸ்வரர் மணமக்களுக்கான அலங்காரத்தில் ஜொலித்தனர். அங்கிருந்து பழைய திருமண மண்டபம் அழைத்து வரப்பட்டனர். திருப்பரங்குன்றம் முருகன்-தெய்வானை, பவளக்கனிவாய் பெருமாள் ஆகியோரும் காலை 5.00 மணிக்கு கோயில் வந்து சேர்ந்தனர். சுவாமி, அம்மனுக்கு ஐவகை தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து, மணமக்களின் பிரதிநிதிகளாக வேடமிட்ட இரு சிவாச்சாரியார்களுக்கு வேஷ்டி, பருப்புத் தேங்காய், பூணூல், பணம் வழங்கப்பட்டது. அம்மனுக்கும், சுவாமிக்கும் பட்டு வஸ்திரம் சாத்தப்பட்டு, இருவரும் மணக்கோலத்தில் சித்திரை வீதிகளில் வலம் வந்தனர். மேலக்கோபுர வாசலில் அம்மன், சுவாமி இருவருக்கும் பாதபூஜை நடத்தப்பட்டது. தொடர்ந்து கன்னூஞ்சல் ஆடி, தீபாராதனை நடந்தது.
மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை, திருப்பரங்குன்றம் முருகன், பவளக்கனிவாய் பெருமாள் ஆகியோர் புறப்பட்டு ஆடி வீதிகளின் வழியாக திருக்கல்யாண மண்டபத்திற்கு காலை 10 மணிக்கு எழுந்தருளினர்.திருக்கல்யாணத்திற்காக வடக்கு - மேற்கு ஆடி வீதி சந்திப்பில் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்த மணமேடைக்கு காலை 8.20மணிக்கு மீனாட்சியம்மன், சுவாமி பட்டாடை ஜொலிக்க வந்தனர். காலை 8.40மணிக்கு திருமண சடங்குகள் துவங்கின. 15க்கும் அதிக ஓதுவார்கள் யாகங்கள் வளர்த்து வேதமந்திரம் ஓதினர். சுந்தரேஸ்வரர், மீனாட்சியம்மனுக்கு பச்சைப்பட்டும், பிரியாவிடைக்கு கிளிப்பச்சை பட்டும் அணிவிக்கப்பட்டு இருந்தது.மீனாட்சி அம்மனின் பிரதிநிதியாக விவேக் பட்டர், சுவாமிக்கு சந்தோஷ் பட்டர் ஆகியோருக்கு காப்புக் கட்டப்பட்டது. பின் விக்னேஷ்வர பூஜை, புண்ணியாவஜனம், பஞ்சகவ்யம், கலசபூஜைகள் நடந்தன. பின்னர், ஹோமம், மாங்கல்ய பூஜை போன்றவை நடைபெற்றது. பின்னர், சுவாமி, அம்பாள் 3 முறை மாலை மாற்றிக் கொண்டனர்.
சுந்தரேஸ்வரருக்கு மீனாட்சியை புனித நீர் கொண்டு தாரைவார்க்கும் வைபவம் நடந்தது. 21 சுமங்கலி பெண்கள் நவதானிய பூஜை செய்தனர். பின்பு பட்டர்கள் இருவரும் வைரக்கல் பதித்த தங்க திருமாங்கல்யத்தை சுந்தரேஸ்வரரின் பாதம் மற்றும் கரங்களில் வைத்து எடுத்து, பக்தர்களுக்கு காட்டினர்.மங்களவாத்தியம் முழங்க 9.22மணிக்கு மீனாட்சி அம்மன் கழுத்தில் வைர திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து பிரியாவிடைக்கும் திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டது. அப்போது பக்தர்கள் தங்கள் கையில் இருந்த பூக்களை சுவாமிக்கு தூவி வணங்கினர்.இதனை தொடர்ந்து தங்கத்திலான சந்தன கும்பத்தில் இருந்த சந்தனம் எடுத்து திருமாங்கல்யத்தில் வைக்கப்பட்டது.
இதே போன்று பன்னீர் தெளிக்கப்பட்டு தங்க தட்டில் சூடம் ஏற்றப்பட்டு சுவாமிக்கு தீபாராதனை நடந்தது. திருக்கல்யாணம் முடிந்ததும், அங்கு கூடியிருந்த பெண் பக்தர்கள் தங்கள் மாங்கல்யத்துக்கு புதிதாக மஞ்சள் கயிறு மாற்றிக் கொண்டனர். அம்மனும், சுவாமியும் மாலை மாற்றிக்கொண்ட பின், சிறப்பு பூஜை, ஆராதனைகள் நடந்தன. பக்தர்களுக்கு திருமாங்கல்யப் பிரசாதமும் வழங்கப்பட்டது. இதற்கென கோயில் சார்பில் சுமார் 50ஆயிரம் மஞ்சள் கயிற்று திருமாங்கல்யம் வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிறிது நேரத்தில் மணமேடையிலிருந்து புறப்பட்ட சுவாமியும், அம்மனும் பழைய கல்யாண மண்டபம் வந்தனர். அங்கு மாலை வரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.நாளை காலை தேரோட்டம் நடக்கிறது.