பூகம்பத்தால் உருக்குலைந்த நேபாளத்தில் நிவாரண பணிகள் தீவிரம்: 4 நாட்களுக்கு பின்னர் 4 மாத குழந்தை மீட்பு
4/30/2015 2:06:37 PM
காத்மாண்டு: நேபாளத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் நிவாரணப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளது. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் உதவியுடன், இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 4 நாட்களுக்கு பின்னர் 4 மாத குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது.நேபாளத்தில் கடந்த சனிக்கிழமையன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் வீடுகள், புராதன சின்னங்கள், கோயில்கள் உள்ளிட்டவை தரைமட்டமாகின. இடிபாடுகளில் ஆயிரக்கணக்கானோர் சிக்கிக் கொண்டனர். சாலைகளில் பள்ளங்கள் ஏற்பட்டதால் போக்குவரத்து முடங்கியது. தொலைதொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது.நேபாளத்தில் 75 மாவட்டங்கள் உள்ளன. இதில் 39 மாவட்டங்கள் கடுமையான சேதத்துக்கு ஆளாகியுள்ளன. சுமார் 70 ஆயிரம் வீடுகள் முழுமையாக சேதமடைந்து விட்டன. நிலநடுக்கத்தால் சுமார் 10 ஆயிரம் பேர் வரை இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதுவரை 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
பல்வேறு இடங்களில் நிலச்சரிவு, சாலை பிளவு போன்றவற்றால் உணவு, குடிநீர் கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் உணவு, குடிநீர் இன்றி தவித்து வருகின்றனர். கிராம பகுதிகளில் எவ்வித உதவியும் கிடைக்காமல் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். நிவாரண பணிகளை அரசு துரிதப்படுத்தவில்லை என குற்றம்சாட்டிய மக்கள், ஆங்காங்கே போராட்டமும் நடத்தினர். இந்நிலையில், இந்தியா, பிரான்ஸ், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் உதவியுடன் தற்போது நிவாரணப் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. பல்வேறு நாடுகளும் மீட்புபணிக்கு விமானங்கள், ஹெலிகாப்டர்கள், மீட்பு குழுவினர், மருத்துவக் குழுவினர், உணவு, குடிநீர், மருந்துகளை அனுப்பி வைத்துள்ளன. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் தேவையான உதவிகளை செய்வதாக உறுதியளித்துள்ளன. நேபாளத்தில் உள்கட்டமைப்பு வசதிக்காக உலக வங்கி தேவையான உதவிகளை செய்யும் என வங்கியின் தலைவர் ஜிம் யங் கிம் தெரிவித்துள்ளார்.
நிலநடுக்கம் ஏற்பட்டு 6 நாட்கள் ஆகிவிட்டதால், இடிபாடுகளில் சிக்கியவர்களில் பெரும்பாலானோர் உயிருடன் இருப்பதற்கு வாய்ப்பில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இடிபாடுகளில் சிக்கிக்கொண்ட காத்மாண்டுவை சேர்ந்த ரிஷிகாந்த்(28) என்பவர் 80 மணி நேரத்துக்குபின் நேற்று உயிரோடு மீட்கப்பட்டார். இதேபோல், பக்தபூர் நகரில் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய 4 மாத குழந்தை உயிர் பிழைத்த அதிசயம் நடந்துள்ளது. காத்மாண்டுவில் நிலநடுக்கம் ஏற்பட்டு 22 மணி நேரம் கழித்து பக்தபூரில் நில அதிர்வு ஏற்பட்டது. அப்போது அங்கு கட்டிடங்கள் சரிந்து விழுந்தபோது, 4 மாத ஆண் குழந்தை ஒன்று இடிபாடுகளில் சிக்கி கொண்டது. இந்நிலையில், அப்பகுதியில் நேற்று மீட்புபணி நடைபெற்று கொண்டிருந்தபோது, குழந்தையின் அழுகுரல் கேட்டது. உடனே கட்டிட இடிபாடுகளை அகற்றி அந்த குழந்தையை மீட்டனர். அந்த குழந்தையின் பெயர் சோனித் என தெரியவந்தது. சிறுகாயங்களுடன் தப்பிய அந்த குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளது. இடிபாடுகளில் சிக்கி காயங்களுடன் மீட்கப்பட்டவர்களுக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். முகாம்களில் மற்றும் திறந்தவெளியில் உள்ளவர்களுக்கு குடிநீர், உணவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த மீட்புகுழுவினர் நிவாரணப்பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.