தலைமை செயலகத்தில் உள்ள முதல்வர் தனிப்பிரிவு அருகே மழையால் வேருடன் மரம் விழுந்ததில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் உடல் நசுங்கி பலி
11/2/2025 5:10:28 PM
சென்னை: சென்னை தலைமை செயலகம் இன்று வழக்கம் போல பரபரப்பாக காணப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தலைமை செயலகத்தின் 4வது நுழைவு வாயில் அருகே முதல்வர் தனிப்பிரிவு இயங்கி வருகிறது. இந்த பிரிவில் புகார் அளிக்க தமிழகம் முழுவதிலும் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் தினமும் வந்து செல்கின்றனர். இதனால் புகார் அளிக்க வரும் பொதுமக்களை முறைப்படுத்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில் இன்று காலை முத்தியால் பேட்டை காவல் நிலைய போக்குவரத்து தலைமை காவலர் கவிதா மற்றும் ராயபுரம் போக்குவரத்து தலைமை காவலர் முருகன் உள்ளிட்ட போலீசார் பாதுகாப்பு பணி மேற்கொண்டனர்.
சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் தொடர் கன மழை ெபய்து வருகிறது. இதனால் தலைமை செயலகத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள மரங்கள் அனைத்தும் சற்று சாய்ந்த நிலையில் இருந்துள்ளது. முதல்வர் தனிப்பிரிவு முன்பு 20 ஆண்டுகளுக்கு மேலாக தூங்கு மூஞ்சி மரம் ஒன்று உள்ளது. இந்த மரத்தின் அருகே நின்று தான் போலீசார் பாதுகாப்பு பணி மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில் இன்று காலை 9.10 மணிக்கு தலைமை காவலர் கவிதா, முருகன் ஆகியோர் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சற்று பலமாக மழையுடன் காற்று வீசியது. இதில் தூங்குமூஞ்சி மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. மரத்தடியில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் தலைமை காவலர் கவிதா சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி துடிதுடித்து உயிரிழந்தார். அவருடன் பாதுகாப்பு பணியில் இருந்த முருகன் என்ற தலைமை காவலர் படுகாயங்களுடன் மரத்தின் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடினார்.
இதை பார்த்த தலைமை செயலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பதறி அடித்து கொண்டு உயிருக்கு போராடிய தலைமை காவலர் முருகனை மீட்டு சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலின் படி தலைமை செயலகத்தில் உள்ள தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மரத்தின் இடிபாட்டில் சிக்கி உயிரிழந்த தலைமை பெண் காவலர் கவிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிறகு மரம் அறுப்பு இயந்திரங்களை கொண்டு வேருடன் விழுந்த தூங்குமூஞ்சி மரத்தை தீயணைப்பு வீரர்கள் அப்புறப்படுத்தினர். வழக்கமாக இந்த மரத்தின் அருகே தான் அமைச்சர்கள் மற்றும் செயலாளர்கள் கார்கள் நிறுத்தப்படும்.
10 மணிக்கு மேல் இந்த மரம் விழுந்து இருந்தால் பெரும் உயிர் சேதம் ஏற்பட்டு இருக்கும் என்று தலைமை செயலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தெரிவித்தனர். இந்த விபத்தில் கார் ஒன்று, இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தது. பாதுகாப்பு பணி மேற்கொண்டிருந்த பெண் தலைமை காவலர் ஒருவர் மரம் விழுந்து உயிரிழந்த சம்பவம் போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தை தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கு மேல் உள்ள மரத்தின் கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். உயிரிழந்த கவிதா, தண்டையார்பேட்டை காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார். இவரது கணவர், சாய்பாபா ரயில்வே ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு அருண்குமார்(22) என்ற மகனும், சினேகா பிரியா(20) என்ற மகளும் உள்ளனர்.
''பெண் காவலர் குடும்பத்துக்கு 10 லட்சம்: முதல்வர் அறிவிப்பு''
சென்னை தலைமை செயலக முதலமைச்சர் தனிப்பிரிவு கட்டிடத்தின் அருகில் உள்ள பழமை வாய்ந்த பெரிய மரம், மழையின் காரணமாக இன்று காலை 9 மணியளவில் வேரோடு சாய்ந்து விழுந்தது. அப்போது, காவல் பணியில் இருந்த முத்தியால்பேட்டை போக்குவரத்து காவல்நிலைய தலைமை காவலர் கவிதா, மரத்தின் அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயர செய்தியை கேட்டு மிகுந்த மன வருத்தமடைந்தேன். அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். இந்த சம்பவத்தில் உயிரிழந்த கவிதா குடும்பத்தாருக்கு உடனடியாக முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.10 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.