தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி தேர்தல் நடத்த 4 மாதங்கள் கால அவகாசம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு
9/27/2021 4:51:08 PM
புதுடெல்லி: தமிழகத்தில் மாநகராட்சி மற்றும் நகராட்சி தேர்தலை நடத்துவதற்கு 4 மாதங்கள் கால அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை ஊராட்சி ஒன்றிய, கிராமப்புற ஊரக உள்ளாட்சி அமைப்புகள், நகராட்சி அமைப்புகள், மாநகராட்சி அமைப்புகள் எனத் தனித் தனியாக 3 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தலை நடத்துவதாக மாநில தேர்தல் ஆணையத்தின் தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், காஞ்சிபுரம், செங்கப்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி மற்றும் வேலூர் என புதிதாக உருவாக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களின் வார்டு வரையறை முடிக்கப்படவில்லை என வழக்கு தொடர்ப்பட்டதால், இந்த 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் கிராமப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி தேர்தலை ஆணையம் நடத்தி முடித்தது.
இந்த நிலையில் சங்கர் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2019ம் ஆண்டு ஒரு ரிட் மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், ‘‘ஊரக உள்ளாட்சிகளில் இடஒதுக்கீடு மற்றும் 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி வார்டு மறுவரையறையை தெளிவுபடுத்திய பின்னர் உள்ளாட்சி தேர்தலை தமிழகத்தில் நடத்த வேண்டும். அதுவரை புதியதாக வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அட்டவணையை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலே நடத்த வேண்டும். இதில் புதியதாக உருவக்கப்பட்டுள்ள ஒன்பது மாவட்டங்களுக்கு 3 மாதத்தில் வார்டு மறுவரையறை மற்றும் இடஒதுக்கீடு பணிகளை விரைந்து முடித்து அதற்கும் தேர்தலை நடத்த வேண்டும்.
இதுகுறித்த அனைத்து பணிகளையும் மறுவரையறை ஆணையம் கண்காணிக்கும் என கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி உத்தரவிட்டிருந்தது. ஆனால், கொரோனா நோய் தொற்றை அடிப்படையாக கொண்டு கால அவகாசம் வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்தின் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, தேர்தல் நடத்துவதற்கான தேதியை உச்ச நீதிமன்றம் தொடர்ந்து நீட்டித்து உத்தரவிட்டிருந்தது. இறுதியாக இந்த ஆண்டு செப்டம்பர் 15ம் தேதிக்குள் தமிழகத்தில் நகராட்சி, மாநகராட்சி மற்றும் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று கடந்த ஜூன் 23ம் தேதி உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, சூர்யகாந்த் மற்றும் ஹேமா கோலி ஆகியோர் அமர்வில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. மாநகராட்சி, நகராட்சிகளுக்கான தேர்தல் குறித்து 2 நாட்களில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி, உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு தேர்தல் ஆணையத்திற்கு கால அவகாசம் தருவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்றார்.
இதைக்கேட்ட நீதிபதிகள், விரைவாக தேர்தல் நடத்த வேண்டும் என்று நீங்கள்தானே கேட்டீர்கள் என்று கருத்து தெரிவித்தனர். அப்போது, மாநில தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான கிருஷ்குமார், சட்டப் பேரவை தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப் பதிவு எந்திரங்களை சரிபார்க்க கால அவகாசம் வேண்டும். வார்டு வரையறை பணிகள் முடிவடையவில்லை. எனவே, 2022 மார்ச் வரை கால அவகாசம் வேண்டும் என்றார். இதைக்கேட்ட நீதிபதிகள், தேர்தலை தள்ளிவைக்க கோரும் மாநில தேர்தல் ஆணையத்தின் கோரிக்கை ஏற்ககூடியதல்ல. 4 மாதங்கள் கால அவகாசம் தருகிறோம். அதற்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.