அனைவரின் கோரிக்கைக்கும் செவிமடுக்கும் ஆட்சியாக திமுக ஆட்சி இருக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
9/24/2021 5:04:31 PM
சென்னை: அனைவரது கோரிக்கைக்கும் செவிமடுக்கக்கூடிய ஆட்சியாக இந்த ஆட்சி இருக்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். சென்னை மருத்துவ கல்லூரியில் இன்று, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் புராதனமான பெருக்கமரம் குறித்த கல்வெட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதையடுத்து மக்களை தேடி மருத்துவம் மையத்தை திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து, உலக காது கேளாதோர் வாரத்தை முன்னிட்டு, தேசிய காது கேளாமை வருமுன் காத்தல் மற்றும் கட்டுப்படுத்துதல் திட்டத்தையும் முதல்வர் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி, எழிலன் எம்எல்ஏ, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: உலக காது கேளாதோர் வாரம் இவ்வாண்டு செப்டம்பர் 20-26ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. அதையொட்டி இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ஒருவாரம் மட்டும் மக்களை கவனிக்கிற அரசு இது அல்ல.
தொடர்ந்து மக்களை கவனித்து கொண்டிருக்கிற அரசு தான் திமுக அரசு என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். குறிப்பாக ஏழை, எளிய, விளிம்பு நிலையில் இருக்கக்கூடிய மக்களை கைதூக்கி விடுகிற அரசுதான் திமுக அரசு. அப்படித்தான் எப்போதெல்லாம் திமுக அரசு ஆட்சியில் இருந்ததோ, இருக்கிறதோ அப்போது அதை நாம் தொடர்ந்து நிறைவேற்றி கொண்டிருக்கிறோம். கலைஞர் முதல் முறையாக முதலமைச்சராக இருந்த நேரத்தில் ஒரு இளைஞராக இருந்தேன்.
ஒவ்வொரு ஆண்டும் தன்னுடைய பிறந்தநாளை தனக்காக கொண்டாடாமல், தன்னுடைய பெருமைகளை மட்டும் எடுத்து சொல்லக்கூடிய விழாவாக இல்லாமல் அந்த விழா மக்களுக்கு பயன்பட வேண்டும். மக்களுக்காக கொண்டாடப்பட வேண்டும் என்ற நிலையிலே பல திட்டங்களை தன்னுடைய பிறந்தநாள் மூலமாக நாட்டுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் 1971, ஜூன் 3ம் தேதியில் பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு என்ற திட்டத்தை அறிவித்து, அவர்களுக்கு உதவி செய்யக்கூடிய வகையில், தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து மாவட்டங்களிலும் இல்லங்களை உருவாக்கிட வேண்டும் என அதை பயன்படுத்தினார்.
1972ம் ஆண்டு தனது பிறந்தநாளை கண்ணொளி திட்டம் இலவசமாக மக்களுக்கு அந்த சிகிச்சை வழங்கி கண்ணொளி திட்டத்தை உருவாக்கி தந்தார்கள். பிறகு 1973ம் ஆண்டு மனிதனே மனிதனை வைத்து இழுக்கும் கொடுமையான கைரிக்ஷாவை அப்புறப்படுத்தினோம். ஆனால் அப்புறப்படுத்தினால் அவர்கள் வாழ்க்கை என்ன ஆவது என்பதை யோசித்து அதற்கு மாற்றாக சைக்கிள் ரிக்ஷாக்கள் வழங்கும் திட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்றினார். 1974ம் ஆண்டு தொழுநோயாளிகள் மறுவாழ்வு என்கிற திட்டத்தை கொண்டுவந்து அதையும் நிறைவேற்றி தந்தார்கள்.
அவருடைய வழியில் நானும் ஆண்டுதோறும் என்னுடைய பிறந்தநாள் வருகின்றபோது மறக்காமல் ஒவ்வொரு ஆண்டும் அண்ணா மேம்பாலத்திற்கு அருகில் இருக்கும் சிறுமலர் காதுகேளாதோர் பள்ளிக்கு நான் மட்டும் அல்ல எனது குடும்பத்தோடு சென்று, அங்கிருப்பவர்களுடன் உட்கார்ந்து பேசி உணவு அருந்தி கொண்டாடிக்கொண்டிருந்தேன். பிறகு அந்த நாளில் அத்தகைய பிள்ளைகளை சந்திப்பது, கேக் கொடுப்பது, உணவு வழங்குவது எனக்கு ஒரு மனநிறைவை தந்துக்கொண்டிருக்கிறது. அந்த மனநிறைவைத்தான் இந்த விழாவின் மூலமாகவும் நான் அடைந்து கொண்டிருக்கிறேன்.
வானுயர வள்ளுவருக்கு சிலையும் வைப்போம், லட்சக்கணக்கானோருக்கு வேலை கொடுக்கும் டைடல் பார்க்கும் அமைப்போம், அதேநேரத்தில் ஏழைகளின் பசிக்கும் உணவளிப்போம். இதுபோன்ற மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையானதை மறக்காமல் வழங்குவோம். இதுதான் திமுக அரசின் லட்சியமாக இருந்து கொண்டிருக்கிறது. வானளாவிய வளர்ச்சி, பல்லாயிரம் கோடி திட்டங்கள், பறக்கும் சாலைகள் இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கத்தில் குடிசைகளை மாற்றி அடுக்குமாடி வீடுகள் அவர்களுக்கு கட்டித்தர வேண்டும் என்ற அந்த நிலையிலும் பணியாற்றி கொண்டிருக்கிறோம்.
காதுகேளாதோருக்கு கருவி மாட்டுவோம். இதுதான் திமுக அரசு. பெரிய விஷயங்களை பார்க்கும் போது சின்ன விஷயங்கள் கண்ணுக்கு தெரியாது என்று கூறுவார்கள். அது தவறானது.
திராவிட ஆட்சியில் பெரியவை மட்டும் அல்ல, சின்னவையும் தெரியும். அனைவரது கோரிக்கைக்கும் செவிமடுக்கக்கூடிய ஆட்சியாக இந்த ஆட்சி இருக்கும் என்பதற்கு இந்நிகழ்ச்சியே உதாரணமாக அமைந்துள்ளது. இந்த உயரிய நோக்கத்தை முழுவதுமாக செயல்படுத்துவதற்காகத்தான் கலைஞர் காப்பீட்டு திட்டத்தை முதல்வராக இருந்த கலைஞர் உருவாக்கி தந்தார்கள்.
முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் காது நுண் எழும்பு கருவி பொருத்தும் அறுவை சிகிச்சையை இதுவரை 4101 குழந்தைகளுக்கு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ.327 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. ஒரு குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய ரூ.6.36 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அறுவை சிகிச்சை செய்ய முடியாத குழந்தைகளுக்கு உயர் சிகிச்சை செய்யப்படுகிறது. அதற்கு ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பழுதடைந்த உபகரணங்களை மாற்றி தருவதற்காக ரூ.3.62 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இதுவரை 1,35,572 பேருக்கு ரூ.108 கோடி செலவில் புதிய காது கேட்கும் கருவி வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டங்களை மேலும் தொடர்வதற்காக அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் நவீன கருவிகள் வாங்குவதற்கு ரூ.10 கோடி இந்தாண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை, கிருஷ்ணகிரி, திருச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளுக்கு ரூ.98.9 லட்சம் மதிப்புள்ள உயர்தர செவித்திறன் கருவிகளை வழங்கியிருக்கிறேன். புதிய காது கேட்கும் கருவி வழங்கியிருக்கிறேன். பழைய கருவிகள் மாற்றித்தரப்பட்டுள்ளது. புதிதாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டவர்களுக்கும் கருவிகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு முறையான பயிற்சி மூலம் பேசும் திறன் பெற்று வரும் குழந்தைகளை கண்டு நான் மகிழ்ந்து கொண்டிருக்கிறேன். விரைவில் நீங்கள் முழுமையாக குணமடைய வேண்டும். சிலவாரங்களுக்கு முன்பு கிருஷ்ணகிரிக்கு சென்றிருந்தேன். அங்கு மக்கள் பயன்பெறும் வகையில் மக்களை தேடி மருத்துவம் என்ற மகத்தான திட்டத்தை நான் தொடங்கி வைத்தேன். இன்றைக்கு அந்த திட்டம்தான் தமிழக அரசுக்கு மிகப்பெரிய பெயரை ஈட்டித்தந்து கொண்டிருக்கிறது. நாள்தோறும் கிராமம் கிராமமாக, பகுதி, பகுதியாக, தெரு, தெருவாக மக்கள் நல்வாழ்வு துறையினர் சென்று மக்களுக்கு தேவையான சிகிச்சைகளை அளித்து வருகின்றனர்.
மருத்துவமனைக்கு வர முடியாதவர்கள், பணம் இல்லாதவர்கள், தீராத நோயாளிகள் ஆகியோரின் கவலைகளை போக்கும் திட்டமாக உள்ளது. அரசை தேடி மக்கள் வந்த காலமாக இருந்தது. இப்போது மக்களை தேடி அரசு செல்லக்கூடிய காலமாக இந்த அரசு உருவாக்கியுள்ளது. இந்த மாற்றத்திற்கு நேரம் காலம் பார்க்காமல் உழைத்து கொண்டிருக்ககூடிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரை நான் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன். கலைஞர் ஒருமுறை சொன்னார் ஏழை, எளிய விளிம்பு நிலை மக்களை அன்போடு அரவணைத்து அனைத்துமாக இருக்கும் அரசாக திமுக அரசு இருக்கும் என்று சொன்னார்கள். அதைத்தான் நான் வழிமொழித்து உங்கள் அனைவருக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.