சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், 3 பெண்கள் உட்பட ஜனாதிபதி ஒப்புதல் கிடைத்த பின் பதவியேற்பு
8/26/2021 5:35:01 PM
புதுடெல்லி: உச்சநீதிமன்றத்திற்கு 3 பெண்கள் உட்பட 9 நீதிபதிகள் நியமனம் தொடர்பான கொலீஜியம் பரிந்துரைக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளதால், ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு பின் அவர்கள் பதவியேற்பார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையில், நீதிபதிகளை நியமனம் செய்வது ெதாடர்பான ‘கொலீஜியம்’ ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், உச்சநீதிமன்றத்திற்கு மேலும் 9 புதிய நீதிபதிகளை நியமிப்பதற்கான பரிந்துரை பட்டியல் ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஒரே நேரத்தில் 9 பேரின் பெயர்கள் உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவது இதுவே முதன்முறை. இந்த 9 பேரில் 8 பேர் தற்போது நீதிபதிகளாக உள்ளவர்கள். ஒருவர் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர். ஒன்பது நீதிபதிகளின் பட்டியலில், கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஓகா, குஜராத் தலைமை நீதிபதி விக்ரம் நாத், சிக்கிம் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.கே.மகேஸ்வரி, தெலங்கானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஹீமா கோலி, கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி நாகரத்தினா, நீதிபதி சி.டி.ரவிக்குமார், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி பேலா எம். திரிவேதி மற்றும் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
முன்னதாக கடந்த 17ம் தேதி நீதிபதிகள் யு.யு.லலித், ஏ.எம்.கான்வில்கார், டி.ஒய்.சந்திரசூட் அடங்கிய கொலீஜியம் ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. அந்தக் கூட்டத்தில் தான் இந்தப் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. கொலீஜியம் முதன்முறையாக ஒரே தீர்மானத்தில் மூன்று பெண் நீதிபதிகளை உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்குப் பரிந்துரைத்துள்ளது. அவர்கள் நாகரத்தினா, ஜே.கே.மகேஸ்வரி மற்றும் பேலா திரிவேதி ஆகியோர் ஆவர். பதவி ஏற்க உள்ள 9 பேரில், நீதிபதிகள் நாகரத்னா, நரசிம்மா, விக்ரம் நாத் ஆகியோருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகும் வாய்ப்பு உள்ளது. அதேபோல், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாகப் பதவி வகித்த நரசிம்மா, உச்ச நீதிமன்றத்துக்கு நேரடியாக நீதிபதியாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக 8 பேர் இதுபோல் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொலீஜியம் பரிந்துரையை ஏற்று 3 பெண் நீதிபதிகள் உட்பட 9 பேரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான பரிந்துரையை ஒன்றிய அரசு குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளது. குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்ற பின்னர் முறைப்படி மேற்கண்ட நீதிபதிகள் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்றுக் கொள்வர் என்று நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன. அதேநேரம், கடந்த சில நாட்களுக்கு முன் உச்சநீதிமன்ற நீதிபதி ரோஹிண்டன் நாரிமன் ஓய்வு பெற்ற பின், 9 புதிய நீதிபதிகள் நியமனம் தொடர்பான செய்தி ஊடகங்களில் வெளியானதால், இதற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா அதிருப்தி தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.