தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் எப்போது?.. முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை அவசர ஆலோசனை
7/27/2021 5:04:26 PM
சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை அமைச்சர்கள், அதிகாரிகளுடன் தலைமை செயலகத்தில் அவசர ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் கடந்த 2016ம் ஆண்டில் இருந்து உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் ஒத்திவைக்கப்பட்டு வந்தது. தேர்தலை நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில், கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு பின் 27 மாவட்டங்களில் ஊரக பகுதிகளில் மட்டும் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது.
புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களிலும் நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளிலும் இன்னும் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், வரும் செப்டம்பர் 15ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகின்றன. அதேநேரம், முதல்வர் மு.க.ஸ்டாலினும் தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.
இதுகுறித்த அறிவிப்பு, கடந்த மாதம் நடைபெற்ற கவர்னர் உரையிலும் இடம் பெற்றிருந்தது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், இன்று மாலை 5 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன், தலைமை செயலாளர் இறையன்பு, மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார், சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படுகிறது. மேலும், தேர்தலுக்கு முன் வார்டு வரையறை உள்ளிட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டுக் கொள்வார். தமிழகத்தில் தற்போது 27 மாவட்டங்களில் ஊரக பகுதிகளுக்கான தேர்தல் முடிந்துள்ளது. மீதமுள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஊரக பகுதிகளில் தேர்தல் நடத்துவது மற்றும் தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கவும் இன்று நடைபெறும் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டு முடிவு செய்யப்பட இருக்கிறது.