குழந்தை வேண்டாம் என வற்புறுத்தியதால் திருமணமான 3 மாதத்தில் கர்ப்பிணி தற்கொலை
4/15/2021 5:32:57 PM
புழல்: புழல் புனித அந்தோணியார் நகர் பிரதான சாலையைச் சேர்ந்த சேகர் - ஈஸ்வரி தம்பதியரின் மகன் லோகுபிரபாகரன் (33). தனியார் கேபிள் டிவி ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் சென்னை முகப்பேரைச் சேர்ந்த சந்தியா (31) என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், சந்தியாக (இரண்டு மாதம்) கர்ப்பமடைந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 4.30 மணியளவில் சந்தியாவுக்கு காபி கொடுப்பதற்காக மாமியார் ஈஸ்வரி கதவைத் தட்டியபோது நீண்டநேரமாகியும் திறக்காததால், கணவர் சேகரிடம் கூறினார். விரைந்து வந்த அவர் ஜன்னல் வழியாக பார்த்தபோது, அங்கே சந்தியா புடவையால் மின்விசிறியில் தற்கொலைக்கு முயன்று கொண்டிருந்தார்.
இதனையடுத்து கதவை உடைத்து சந்தியாவை மீட்டு சிகிச்சைக்காக செங்குன்றம் அடுத்த முண்டியம்மன் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே சந்தியா இறந்துவிட்டதாக கூறினர். புகாரின்பேரில், புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்ததில், குடும்ப சூழ்நிலை காரணமாக கணவர் லோகு பிரபாகரன் தற்போது குழந்தை வேண்டாம் என அடிக்கடி கூறிவந்துள்ளார்.
இதனால் மனமுடைந்த சந்தியா தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, கணவர் லோகு பிரபாகரனை போலீசார் நேற்று இரவு கைது செய்து மாதவரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். திருமணமாகி மூன்று மாதங்களில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டுள்ளதால் சென்னை தண்டையார் பேட்டை ஆர்டிஓ விசாரணை நடத்தி வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.