கூட்டணியில் இருந்து வெளியேறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிமுகவுடன் தேமுதிக இன்று மாலை மீண்டும் பேச்சுவார்த்தை: தேமுதிக கோரிக்கைக்கு செவி சாய்க்கப்படுமா?
3/2/2025 6:26:22 PM
சென்னை: கூட்டணியில் இருந்து வெளியேறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிமுகவுடன், தேமுதிக இன்று மாலை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துகிறது. அதிமுக சட்டசபை தேர்தலில் தனது கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக, பாஜகவுடன் பலகட்டமாக பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், கூட்டணியில் உள்ள தேமுதிகவை கண்டு கொள்ளாமல் இருந்து வந்தது. இதற்கு அதிக தொகுதிகள் கேட்டதே காரணமாக கூறப்பட்டது. அதாவது அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெற்றிருந்த போது ஜெயலலிதா ஒதுக்கிய 41 தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தது தான் காரணம். இதில் இருந்து அவர்கள் இறங்கி வருவார்கள் என்று அதிமுக தேமுதிகவிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இந்த நிலையில் கூட்டணியில் உள்ள பாமகவுக்கு 23 தொகுதிகளை அதிமுக ஒதுக்கியது.
இந்த நிலையில் திடீரென அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி ஆகியோர் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பாமகவுக்கு 23 தொகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு 20 தொகுதிகள் கொடுக்க வேண்டும் என்று விஜயகாந்த் வலியுறுத்தினார். அதற்கு அமைச்சர்கள், ‘‘விஜயகாந்த் பிரசாரத்துக்கு வந்தால் 14 தொகுதிகள். இல்லா விட்டால் 10 தொகுதிகள் என்று கூறினர். விரைவில் முடிவை அறிவியுங்கள் என்று சொல்லி விட்டு சென்றனர். அமைச்சர்களின் இந்த பேச்சை கேட்டு விஜயகாந்த் அதிர்ந்து போனார்.
இந்த நிலையில் தேமுதிக குழுவினருடன் முதல்வர் எடப்பாடி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா எம்பி பதவி வழங்க வேண்டும். விஜயகாந்த் மகனுக்கு விருகம்பாக்கம் தொகுதியை ஒதுக்க வேண்டும். தேர்தல் செலவுக்கு பணம் தர வேண்டும் என்று 3 கோரிக்கையை முன்வைத்தனர். அப்போது முதல்வர் 10 தொகுதிகள் தருகிறோம். ராஜ்யசபா எம்பி சீட் கொடுப்பது குறித்து தேர்தலுக்கு பிறகு பேசிக்கொள்ளலாம். அதேபோல் விருகம்பாக்கம் தொகுதியை தருவதாக ஒப்புக்கொண்டார்.
தேர்தல் செலவு தொடர்பாக அமைச்சர் தங்கமணியிடம் பேசிக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டார். இதைத் தொடர்ந்து தேமுதிகவினர் அமைச்சர் தங்கமணியை சந்தித்து பேசினர்.
அப்போது தேமுதிகவினர் எதிர்ப்பார்த்ததை விட குறைவான தொகையை தேர்தல் செலவுக்கு தருவதாக அமைச்சர் கூறியதாக கூறப்படுகிறது. அவர் கூறிய தொகையை பார்த்து தேமுதிகவினர் அதிர்ந்து போயினர். இதனால் கேட்ட பணம் கிடைக்காததால் இறுதியான பதில் எதுவும் சொல்லாமல் சென்று விட்டனர். மீண்டும் நேற்று பேச்சுவார்த்தைக்கு வருவதாக தெரிவித்தனர். ஆனால், பேச்சுவார்த்தைக்கு அவர்கள் வரவில்லை. இதனால் அதிமுக, தேமுதிக பேச்சுவார்த்தை ரத்தானது. இந்த நிலையில் தேமுதிக துணை பொது செயலாளர் எல்.கே.சுதீஷ் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில், “நமது முதல்வர் விஜயகாந்த், நமது கொடி என்று தேமுதிகவின் கட்சி கொடியையும், நமது சின்னம் முரசு சின்னம்” என்றும் அதில் பதிவிட்டிருந்தார். இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், தேமுதிக தனித்து போட்டியிட போகிறதா? என்ற கேள்வி எழுந்தது.
ஆனால், அதிமுகவை மிரட்ட தான் இவ்வாறு பதிவிட்டதாக அதிமுகவில் சிலர் கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில் இன்று மாலை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அதிமுக தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. அமைச்சர் தங்கமணி ேதமுதிகவினருடன் இன்று மாலை பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அதில் தேமுதிகவுக்கு வழங்கப்படும் சீட்டுக்கு ஏற்றார் போல் பணத்தை தேர்தல் செலவுக்கு ஒதுக்க வேண்டும். அவ்வாறு அதிமுக ஒதுக்கும் பட்சத்தில் தேமுதிக சம்மதிக்கும் என்று கூறப்படுகிறது. டீல் பணியாத பட்சத்தில் மீண்டும் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தும் என்று கூறப்படுகிறது.