காஞ்சி. கரசங்காலில் ‘ உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சி வீட்டுக்கு விளக்காகவும்; நாட்டுக்கு தொண்டனாகவும் பணியாற்றுவேன்: மு.க.ஸ்டாலின் பேச்சு
2/27/2021 5:16:13 PM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் கரசங்கால் கிராமத்தில் நடைபெற்ற ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியில், வீட்டுக்கு விளக்காகவும், நாட்டுக்கு தொண்டனாகவும் பணியாற்றுவேன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில், ‘‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’’ என்ற நிகழ்ச்சி ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கரசங்கால் கிராமத்தில் இன்று நடந்தது. காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் எம்எல்ஏ தலைமை வகித்தார். ஸ்ரீபெரும்புதூர் எம்பி டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி எம்.பி, காஞ்சிபுரம் எம்பி சிறுவேடல் செல்வம், எம்எல்ஏக்கள் எஸ்.ஆர்.ராஜா, பல்லாவரம் கருணாநிதி, செங்கல்பட்டு வரலட்சுமி மதுசூதனன், இதயவர்மன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: திமுகவில் தலைவர் பொறுப்பை ஏற்றதில் இருந்து உங்களுக்காக புதிதாக பிறந்துள்ளேன். தலைவர் பொறுப்பென்றால் தலைமை தொண்டன் என்று அர்த்தம். அன்று முதல் இன்று வரை உங்களுக்காக செயல்பட்டு வருகின்றேன். இனியும் அப்படிதான் செயல்படுவேன். திமுகவின் மரபணுக்களில் எதிர்கால கனவுகளை கொண்டு உங்கள் கனவுகளை நினைவாக்குவேன்.
எனது கனவில் உதித்ததுதான் 100 நாளில் குறைகளை தீர்ப்பேன் என்ற கனவு திட்டம். ஏழை-எளிய, பாட்டாளி மக்களின் குறைகளை தீர்ப்பேன். தமிழகத்தில் ஒரு ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது. அந்த ஆட்சி முடியபோகும் நேரத்தில், ஏதேதோ திட்டங்களை அறிவிக்கிறது. ஆனால், எந்த திட்டத்துக்கும் நிதி ஒதுக்கவில்லை. கடன் வாங்குவதில்தான் குறியாக இருக்கிறார்கள். அந்த வகையில் 6 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளனர். ஆனால், மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. பினாமிகளுக்கு டெண்டர் விடுவதில்தான் திட்டங்களை செயல்படுத்துகிறார்கள். பழனிச்சாமி ஆட்சியில் யாரும் மகிழ்ச்சியாக இல்லை. இந்த ஆட்சியில் விவசாயிகள், நெசவாளர்கள், ஆசிரியர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. சிறு நிறுவனங்கள் நலிந்து கிடக்கிறது. புதிதாக தொழில் தொடங்க வருபவர்கள் ஜிஎஸ்டியால் முடங்கியுள்ளனர். புதிய தொழில் தொடங்க வருபவர்கள் லஞ்ச லாவண்யத்தால் மற்ற மாநிலங்களுக்கு சென்றுவிடுகின்றனர். தமிழ்நாட்டில் எந்த தரப்பு மக்களும் நிம்மதியாக இல்லை.
ஊழல்வாதிகளுக்கு இந்த தேர்தல் ஒருமுற்றுப்புள்ளியாக இருக்கவேண்டும். குடிமராமத்து பணியை பெரும் சாதனையாக நினைத்து பழனிச்சாமி தன்னைதானே பாராட்டி கொள்கிறார். மண்ணை அள்ளுவதற்கு பதிலாக பணத்ைத அள்ளுகிறார். குடிமராமத்து பணிக்கு 4 ஆயிரம் கோடி செலவு செய்ததாக சொல்கிறார். சவுடு மண்ணில் கொள்ளையடிக்கிறார். விவசாயிகளுக்கு வழங்குவதாக கூறிவிட்டு சவுடு மண்ணை தனியாருக்கு விற்பனை செய்கிறார். நான் ஒரு விவசாயி என விவசாயிகளை ஏமாற்றி வருகிறார். 2 நாட்களுக்கு முன்பு கோவை வந்த பிரதமர், தான் ஒரு பிரதமர் என்பதை மறந்து திமுகவை அரசியல் விமர்சனம் செய்கிறார். எந்த ஆதாரத்தை வைத்து அவர் பேசுகிறார். பாஜகவினர் செய்கின்ற வன்முறை பற்றி கூறவா? பழனிச்சாமி, பன்னீர்செல்வம் ஆகியோர் கையை உயர்த்தியதால் அவர்களை போல் இவரும் பேசுகிறாரா? பிரதமர் ஆரியத்ைத புகுத்த நினைக்கிறார். நாங்கள் திராவிடத்தால் தடுப்போம். திமுகவை கொச்சைப்படுத்தி பேசியது மிகவும் கண்டிக்கத்தக்கது. பாஜகவில் குற்றப்பின்னணி உள்ளவர்களை கமலாலயத்தில் மாலை போட்டு வரவேற்கிறார்கள், திமுக பற்றி குறைசொல்ல அவர்களுக்கு தகுதியில்லை.
உங்கள் கட்சியில் உள்ள அமித்ஷா பற்றி விசாரிக்க முடியுமா? திமுக பலமிழந்து இருப்பதாக பிரதமர் பேசியிருக்கிறார். கடந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவை மறந்து பேசுகிறாரா? 39 எம்பிக்களை வென்று நாடாளுமன்றத்தில் 3வது பெரிய கட்சியாக திமுக உள்ளது. சட்டமன்றத்தில் பலம்பொருந்திய எதிர்க்கட்சியாக திகழ்கிறது. 1998ல் அதிமுகவுடன் கூட்டணி வைத்து 3 எம்பிக்களை கைப்பற்றினீர்கள். 1991ல் திமுகவுடன் கூட்டணி வைத்து 4 எம்பிக்களை வென்றீர்கள். 2014ல் கன்னியாகுமரி தொகுதியில் வென்றீர்கள். மற்ற எல்லா தேர்தலிலும் தோற்ற கட்சிதானே பாஜக. தமிழகத்தில் இருந்து நாடாளுமன்றம், சட்டமன்றத்துக்கு ஒரு எம்பி, எம்எல்ஏவாவது சென்றிருக்கிறார்களா? மக்களுக்காக அன்றும் இன்றும் போராடி வரும் திமுக ஆட்சி மலர செய்வோம். வீட்டுக்கு விளக்காகவும், நாட்டுக்கு தொண்டனாகவும் நான் பணியாற்றுவேன். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.