சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை முடிந்தது: விடுதலையானார் சசிகலா...பிப். முதல் வாரத்தில் சென்னை திரும்ப முடிவு
1/27/2021 6:15:50 PM
பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட நான்கு ஆண்டு சிறை தண்டனை இன்றுடன் முடிவடைந்ததையொட்டி அதிகாரப்பூர்வமாக அவர் இன்று காலை 10.30 மணி அளவில் விடுதலை செய்யப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். முன்னாள் முதல்வர் ஜெயலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் தனி நீதிமன்றத்தில் கடந்த 2004 முதல் 2014 வரை பத்து ஆண்டுகள் நடைபெற்றது.
இவ்வழக்கில் விசாரணை நடத்திய நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா, 2014 செப்டம்பர் 27ம் தேதி வழங்கிய தீர்ப்பில், அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நான்கு பேரையும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தார். அவர்களுக்கு நான்கு ஆண்டு சிறை தண்டனையும், முதல் குற்றவாளியான ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதமும், மற்ற மூன்று குற்றவாளிக்கு தலா ரூ.10 கோடியே 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அந்த தீர்ப்பை எதிர்த்து நான்கு பேரும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அவ்வழக்கின் மீது விசாரணை நடத்திய நீதிபதி குமாரசாமி நான்கு பேரையும் விடுதலை செய்து 2015 மே மாதம் தீர்ப்பளித்தார்.
உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அவ்வழக்கு இரண்டு ஆண்டுகள் நடைபெற்று 2017 பிப்ரவரி 14ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், கர்நாடக உயர் நீதிமன்றம் விடுதலை செய்து வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து, பெங்களூர் தனி நீதிமன்றம் குற்றவாளிகள் என்று வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து 2017 பிப்ரவரி 15ம் தேதி முதல் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூன்றுபேரும் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வருகின்றனர். அவர்களது தண்டனை காலம் பிப்ரவரி 14ம் தேதி முடிவடைகிறது. நீதிமன்றம் விதித்த அபராத தொகையை கடந்த டிசம்பர் மாதம் சசிகலா செலுத்தினார்.
இருப்பினும் அவர் இதே வழக்கில் சிறையில் இருந்த நாட்களை கழித்தும், சிறையில் இருந்தபோது, பரோலில் சென்ற நாட்களைக் கூட்டியும் சசிகலாவை ஜனவரி 27ம் தேதி (இன்று) விடுதலை செய்வதாக பெங்களூர் சிறை நிர்வாகம் அறிவித்தது. அதன்படி சசிகலா இன்று தனது நான்காண்டு சிறை தண்டனையை நிறைவு செய்கிறார். சசிகலா விடுதலையை கோலாகலமாக கொண்டாடி உற்சாக வரவேற்பு அளிக்க அவரது ஆதரவாளர்கள் காத்திருந்தனர். இதற்கிடையில், அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த 20ம் தேதி பெங்களூர் விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அதே மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விடுதலை தினமான இன்று அவர் மருத்துவமனையில் இருப்பதால் அவரது விடுதலை தொடர்பான விவகாரங்களை மருத்துவமனையிலேயே முடித்துக்கொள்ள சிறை நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி இன்று அவரை விடுதலை செய்வது தொடர்பான ஆவணங்களில் கையெழுத்து வாங்குவதற்காக பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறை கண்காணிப்பாளர் சேஷமூர்த்தி, துணை கண்காணிப்பாளர் லதா ஆகியோர் மருத்துவமனைக்கு வந்தனர். சசிகலாவிடம் விடுதலைக்கான 16 ஆவணங்களில் சுமார் 10.30 மணி அளவில் கையெழுத்து வாங்கினர். இதனைத்தொடர்ந்து சிறையில் உள்ள அவரது உடைமைகளை ஒப்படைக்க தனிக்கடிதம் கொடுத்தனர். சசிகலா விடுதலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்களை மருத்துவமனை கண்காணிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணாவிடம் சேஷமூர்த்தி ஒப்படைத்தார்.
சசிகலாவின் மருத்துவ அறிக்கையை சேஷமூர்த்தியிடம் ரமேஷ் கிருஷ்ணா ஒப்படைத்தார். இந்த நிகழ்வின்போது, வக்கீல்கள் ராஜா செந்தூர் பாண்டியன், ஏ.அசோகன், பி.முத்துகுமார், இளவரசியின் மகன் விவேக் ஆகியோர் உடனிருந்தனர். இதன் மூலம் சிறை பாதுகாப்பில் சசிகலாவுக்கு அளிக்கப்பட்டு வந்த சிகிச்சை முடிவுக்கு வந்தது. இன்று மாலை பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பிப்ரவரி முதல் வாரத்தில் சசிகலா தமிழகம் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சசிகலா விடுதலை செய்யப்படுவதை முன்னிட்டு தமிழகத்தில் இருந்து டிடிவி தினகரன், முன்னாள் அமைச்சர்கள் பழனியப்பன், முன்னாள் எம்எல்ஏ ரங்கசாமி, வக்கீல்கள் தனஞ்செயன், செல்வகுமார், பன்னீர் செல்வம் உள்பட அமமுக தொண்டர்கள் நூற்றுக்கணக்கில் மருத்துவமனை வளாகத்தில் வந்து குவிந்தனர். சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் நோக்கத்தில் பொதுமக்கள் யாரையும் போலீசார் மருத்துவமனை வளாகத்திற்குள் அனுமதிக்கவில்லை. இதே வழக்கில் குற்றவாளியாக இருக்கும் இளவரசி வரும் பிப்ரவரி 5ம் தேதி விடுதலையாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சிறையில் உள்ள வி.என்.சுதாகரன், நீதிமன்றம் விதித்த அபராத தொகை ரூ.10 கோடியே 10 ஆயிரம் இன்னும் செலுத்தாமல் உள்ளதால் தண்டனை காலம் முடிந்தும் வெளியே வரமுடியாத சூழலில் உள்ளார்.