இந்தாண்டு தமிழக அரசு பள்ளி மாணவர்களில் 8 பேருக்கு மட்டுமே எம்பிபிஎஸ் சீட்
10/22/2020 4:47:04 PM
* கடந்தாண்டு கட் ஆப் மதிப்பெண்ணை ஒப்பிடுகையில் அதிர்ச்சி
* 7.5% இடஒதுக்கீடு மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் தருவாரா?
சென்னை: கடந்தாண்டு கடைபிடிக்கப்பட்ட கட்ஆப் மதிப்பெண்ணை ஒப்பிட்டு பார்க்கையில் இந்தாண்டு அரசு பள்ளி மாணவர்களில் 8 பேருக்கு மட்டுமே மருத்துவ சீட் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதேசமயம் 7.5 சதவீத இடஒதுக்கீடு மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்கினால் 300க்கும் மேற்பட்டோருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரியில் சேர 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான சிறப்பு மசோதா தமிழக சட்டப்பேரவையில் கடந்த மாதம் 16ம் தேதி நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா, கவர்னர் பன்வாரிலால் புரோகித்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. 35 நாட்களுக்கு மேலாகியும் கவர்னர், ஒப்புதல் வழங்காமல் உள்ளார். கவர்னர் ஒப்புதல் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
நாடு முழுவதும் இந்தாண்டுக்கான நீட் தேர்வு முடிவடைந்து விட்டதால் விரைவில் மருத்துவ கவுன்சலிங் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதேசமயம் தமிழக கவர்னர் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க அனுமதி அளித்த பிறகே தமிழகத்தில் கவுன்சிலிங் நடைபெறும் என்று அரசு திட்டவட்டமாக அறிவித்தது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் தமிழக அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார், கே.பி.அன்பழகன், சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர் ஆகியோர், நேற்று முன்தினம் சென்னை, கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும்படி வலியுறுத்தினர்.
இதையடுத்து கவர்னர் பன்வாரிலால் புரோகித், சட்ட நிபுணர்கள் மற்றும் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அப்போது, தமிழக அரசு பரிந்துரைத்துள்ள 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு அனுமதி அளித்தால் ஏற்படும் சாதக, பாதக நிலை குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தால், இதை எதிர்த்து சிலர் நீதிமன்றம் செல்வார்கள் என்று கவர்னருக்கு தெரிவிக்கப்பட்டது. அதே நேரம் தமிழக அரசு, சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பியுள்ள சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும். இல்லையென்றால் திருப்பி அனுப்ப வேண்டும். அப்படி திருப்பி அனுப்பும் பட்சத்தில், மீண்டும் தமிழக அரசு கவர்னருக்கு அதே மசோதாவை அனுப்பி வைத்தால் கண்டிப்பாக கையெழுத்து போட்டு ஆக வேண்டும்.
ஆனாலும் கவர்னர் கையெழுத்து போடாமல் காலம் தாழ்த்தி வருவது பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் தலையீடும் இதில் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதனால் 7.5 சதவீத இடஒதுக்கீடு மசோதாவுக்கு அனுமதி அளிக்காமலேயே தமிழகத்தில் மருத்துவ கவுன்சலிங் நடக்க வேண்டும் என்பதை கவர்னர் எதிர்பார்க்கிறாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எனினும் இந்த விவகாரத்தில் இன்னும் ஓரிரு நாளில் கவர்னர் முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில், கடந்தாண்டு கவுன்சிலிங்கில் கடைபிடிக்கப்பட்ட கட்ஆப் மதிப்பெண்ணை ஒப்பிட்டு பார்க்கும் போது, இந்தாண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 8 மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவ கல்லூரியில் சீட் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்தாண்டு பொது பிரிவினருக்கு கட்ஆப் மதிப்பெண் 520 ஆக இருந்தது. அதேபோல் தாழ்த்தப்பட்டவர்களுக்கு 360, பிற்படுத்தப்பட்டோருக்கு 470, மிக பிற்படுத்தப்பட்டோருக்கு 458 ஆக கட்ஆப் இருந்தது. இந்தாண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் 89 பேர் 300க்கும் மேல் மதிப்பெண்கள் பெற்று நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆனால் கடந்தாண்டு கட் ஆப் மதிப்பெண்ணை ஒப்பிட்டு பார்க்கும் போது, இதில் 8 பேருக்கு மட்டுமே மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 2 சீட்டும், மாற்றுத்திறனாளிகளுக்கு 2 சீட்டும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதேசமயம் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டால், சுமார் 300க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ கல்லூரி சீட் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
இதுபற்றி கல்வியாளர்கள் கூறுகையில், அரசு பள்ளியில் படித்த மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவு நிறைவேறுவது தமிழக கவர்னரின் கையில்தான் உள்ளது. கனவு நிறைவேறுமா என்ற அச்சத்திலேயே மாணவர்கள் இருந்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் உரிய முடிவு எடுக்காமல் கவர்னர் காலம் தாழ்த்துவது சரியல்ல. கவர்னர் இனியும் காலம் தாழ்த்தாமல் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கல்வி கனவு கானல் நீராகி விடும் என்று கவலை தெரிவித்துள்ளனர்.