மருத்துவ கல்லூரியில் சேர 7.5 சதவீத உள்ஒதுக்கீடு விவகாரம் சட்ட நிபுணர்களுடன் கவர்னர் ஆலோசனை: அரசு பள்ளி மாணவர்கள் கனவு நிறைவேறுமா?
10/21/2020 5:04:52 PM
சென்னை: மருத்துவ கல்லூரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கலாமா, வேண்டாமா என்பது குறித்து கவர்னர் பன்வாரிலால் புரோகித், சட்ட நிபுணர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து காலதாமதம் ஏற்படுவதால் அரசு பள்ளி மாணவர்கள் கனவு இந்தாண்டு நிறைவேறுமா என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரியில் சேர 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான சிறப்பு மசோதா தமிழக சட்டப்பேரவையில் கடந்த 16ம் தேதி நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதா, கவர்னர் பன்வாரிலால் புரோகித்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. 35 நாட்களுக்கு மேலாகியும் கவர்னர், ஒப்புதல் வழங்காமல் உள்ளார். நாடு முழுவதும் இந்தாண்டுக்கான நீட் தேர்வு முடிவடைந்து விட்டதால் விரைவில் மருத்துவ கவுன்சிலிங் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதுசம்பந்தமான வழக்கு, மதுரை உயர் நீதிமன்றத்தில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, ‘7.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கான மசோதாவுக்கு கவர்னர் அனுமதி அளித்த பிறகே தமிழகத்தில் மருத்துவ கவுன்சிலிங் நடைபெறும்’ என்று அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் தமிழக அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார், கே.பி.அன்பழகன், சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர் ஆகியோர், நேற்று மதியம் 12 மணிக்கு சென்னை, கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து பேசினர். அப்போது, ‘தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றியுள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரியில் சேர 7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு விரைவில் ஒப்புதல் வழங்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து, பேட்டி அளித்த அமைச்சர் ஜெயக்குமார், “மாணவர்கள் கவுன்சலிங் செல்கிற நிலையில் விரைந்து ஒப்புதல் கொடுக்க வேண்டும் என்று கவர்னரிடம் கோரிக்கை வைத்தோம்.
அவரும், எல்லாவற்றையும் கேட்டு விட்டு விரைவாக ஒப்புதல் கொடுப்பதற்கான நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வந்தால் மட்டுமே தமிழகத்தில் மருத்துவ கவுன்சிலிங் நடத்த முடியும் என்றும் கவர்னரிடம் சொல்லிவிட்டோம்” என்றார். இதையடுத்து கவர்னர் பன்வாரிலால் புரோகித், இன்று சட்ட நிபுணர்கள் மற்றும் வழக்கறிஞர்களுடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். அப்போது, தமிழக அரசு பரிந்துரைத்துள்ள 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு அனுமதி அளித்தால் ஏற்படும் சாதக, பாதக நிலை குறித்து விவாதிக்கப்பட்டது. சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகே தமிழக அரசு மசோதாவுக்கு அனுமதி அளிக்கலாமா, வேண்டாமா என்பது குறித்து இன்னும் ஓரிரு நாளில் கவர்னர் முடிவு செய்வார் என்று கூறப்படுகிறது.
கவர்னர், அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரியில் சேர உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு அனுமதியளிக்காமல் இழுதடித்து வருவதால் நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ கவுன்சிலிங்குக்காக காத்திருக்கும் அரசு பள்ளி மாணவர்கள் பல்வேறு கனவுகளுடன் காத்திருக்கிறார்கள். இவர்களின் மருத்துவ படிப்பு கனவு நிறைவேறுமா என்பதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டுள்ளது. காரணம், தமிழக அரசின் மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்க தயக்கம் காட்டி வருகிறார் என்றே கூறப்படுகிறது. இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தால், இதை எதிர்த்து சிலர் நீதிமன்றம் செல்வார்கள்? என்றும் கவர்னருக்கு கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரம் தமிழக அரசு, சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பியுள்ள சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும். இல்லையென்றால் திருப்பி அனுப்ப வேண்டும். அப்படி திருப்பி அனுப்பும்பட்சத்தில், மீண்டும் தமிழக அரசு கவர்னருக்கு அதே மசோதாவை அனுப்பி வைத்தால் கண்டிப்பாக கையெழுத்து போட்டு ஆக வேண்டும். ஆனாலும் கவர்னர் கையெழுத்து போடாமல் 35 நாட்களுக்கு மேலாக காலம் தாழ்த்தி வருவது பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் தலையீடும் இதில் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அதனால் 7.5 சதவீத இடஒதுக்கீடு மசோதாவுக்கு அனுமதி அளிக்காமலே தமிழகத்தில் மருத்துவ கவுன்சிலிங் நடக்க வேண்டும் என்பதை கவர்னர் எதிர்பார்க்கிறாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. கவர்னர் அனுமதி அளித்தால் அரசு பள்ளியில் படிக்கும் சுமார் 300 மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர முடியும். அரசு பள்ளியில் படித்த மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவு நிறைவேறுவது தமிழக கவர்னர் கையில்தான் உள்ளது.