மாணவர்களின் சந்தேகங்களை தீர்க்கவே அக்டோபர் 1ம் தேதி பள்ளிகள் திறப்பு; செங்கோட்டையன் பேட்டி
9/27/2020 5:23:43 PM
கோபி: ‘‘10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களின் சந்தேகங்களை தீர்க்கவே அக்டோபர் 1ம் தேதி பள்ளிகள் திறக்க்ப்படுகிறது’’ என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள நம்பியூரில் குளம் தூர்வாரும் பணியை பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று துவக்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது, 10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் தங்கள் சந்தேகங்களை தீர்ப்பதற்காக பெற்றோர் சம்மத கடிதத்துடன் தான் பள்ளிக்கு வர வேண்டும் என வருவாய்த்துறை மூலமாக ஆணை பிறப்பிக்கப்பட்டது. இது தொடர்பாக அனைத்து துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை செய்து அறிவிப்பார்.
பள்ளிகள் திறப்பு குறித்து இதுவரை எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை. பாடத்தில் உள்ள சந்தேகங்களை தீர்க்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து, அவர்கள் சந்தேகங்களை தீர்ப்பதற்காக மட்டுமே அக்டோபர் 1ம் தேதி பள்ளி திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோர்கள், கல்வியாளர்கள், அனைத்து துறை அதிகாரிகளுடன் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.