சென்னை கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் முதல்வர்
8/15/2020 2:32:37 PM
சென்னை: சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேசிய கொடி ஏற்றி வைத்தார். பின்னர் கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட முன்கள பணியாளர்களுக்கு பதக்கங்களை வழங்கினார். நாட்டின் 74வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டது. சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியை ஏற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி காலை 8.33 மணிக்கு வந்தார். அவரை தலைமை செயலாளர் சண்முகம் வரவேற்றார். அப்போது, பல்வேறு துறை அதிகாரிகளை முதல்வருக்கு அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் திறந்த வாகனத்தில் சென்று காவல்துறையின் அணிவகுப்பை பார்வையிட்டு, மரியாதையை ஏற்றார். இதையடுத்து, காலை 8.45 மணிக்கு தேசிய கொடியை முதல்வர் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.பின்னர் பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு விருதுகளை முதல்வர் வழங்கினார். இதன்படி ஏ.பி.ஜே.அப்துல்கலாம் விருது ஆனந்தம் இளைஞர் அறக்கட்டளை நிறுவனர் செல்வகுமாருக்கு வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, கல்பனா சாவ்லா விருது, பெரம்பலூர் மாவட்டம், அந்தியூரை சேர்ந்த செந்தமிழ் செல்வி, ஆனந்தவள்ளி, ஆதனூரை சேர்ந்த முத்தம்மாள் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. கொரோனா பணிக்காக முதலமைச்சரின் சிறப்பு விருது உலக சுகாதார நிறுவனத்தின் முதன்மை ஆராய்ச்சியாளர் செளமியா சுவாமிநாதனுக்கு வழங்கப்பட்டது. மேலும் சிறந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் விருது வழங்கப்பட்டது.இதனை தொடர்ந்து கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய 27 முன்கள பணியாளர்களுக்கு சிறப்பு பதக்கங்களை வழங்கினார். காவல் துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. மேலும் 27 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள தங்க முலாம் பூசிய பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழை முதல்வர் வழங்கினார். கொரோனா ஊரடங்கால் பார்வையாளர்கள் இல்லாமல் விழா நடந்தது.