நீதிபதிகள் குறித்து சர்ச்சை கருத்து வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் குற்றவாளி; உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
8/14/2020 2:48:31 PM
புதுடெல்லி: உச்சநீதிமன்ற நீதிபதிகள் குறித்து சர்ச்சை கருத்து வெளியிட்ட வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் குற்றவாளி என்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. மூத்த வழக்கறிஞர் பிரசாத் பூஷண் கடந்த ஜூலை மாதம் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் செயல்பாடுகள் குறித்து 2 டுவிட்டரில் சில கருத்துக்களை பதிவிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து பிரசாந்த் பூஷணின் கருத்து நீதித் துறையையும், நீதிமன்றத்தையும் அவமதிப்பதாகக் கூறி உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. பிரசாந்த் பூஷணுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இவ்வழக்கில் பிரசாத் பூஷண் சார்பில் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே வாதாடினார். அப்போது, ‘நீதிபதி மீதான விமர்சனம், நீதிமன்றத்தின் மீதான விமர்சனமாக மாறிவிடாது.
மனுதாரர் தனது டுவிட்டின் பகுதிக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். அவரது கருத்துகள் நீதிமன்றத்தை அவமதிப்பதாகவோ அல்லது நீதிமன்றத்தின் கவுரவத்தை எந்த வகையிலும் குறைக்கவோ செய்யாது. வீடியோ கான்பரன்சிங் மூலம் நடத்தப்படும் வழக்கு விசாரணை குறித்தும் மனுதாரர் அதிருப்தி தெரிவித்துள்ளார்’ என்று பிரசாந்த் பூஷண் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இந்நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘தலைமை நீதிபதி மற்றும் சில நீதிபதிகள் குறித்து பிரசாந்த் பூஷணின் டுவிட்டர் பதிவுகள் நீதிமன்றத்தையும் நீதிபதியையும் அவமதிப்பதாக உள்ளன. அவர் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்படுவதால், பிரசாந்த் பூஷண் குற்றவாளி. 6 மாதம் வரை அவருக்கு சிறை தண்டனை வழங்க முடியும். தண்டனை விபரங்கள் 20ம் தேதி அறிவிக்கப்படும்’ என்று அதிரடி தீர்ப்பளித்தனர்.