‘என் தந்தை உயிருடன் உள்ளார்; வதந்தியை நம்பாதீர்’: பிரணாப் மகன் அபிஜித் தகவல்
8/13/2020 2:37:31 PM
புதுடெல்லி: ‘எனது தந்தை பிரணாப் முகர்ஜி உயிருடன் இருக்கிறார். வதந்திகளை நம்ப வேண்டாம்’ என அவரது மகன் அபிஜித் முகர்ஜி தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் குடியரசுத் தலைவருமான பிரணாப் முகர்ஜிக்கு மூளையில் உள்ள ரத்தக்கட்டியை நீக்குவதற்கு அறுவை சிகிச்சை கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்றது. அதன்பின் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் வென்டிலெட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக ராணுவ மருத்துவமனை சார்பில் இரண்டு மூன்று அறிக்கை வெளியிடப்பட்டது.
அதன்பின் அறிக்கை வெளியிடப்படாததால், இன்று காலையில் இருந்து டுவிட்டரில் ‘பிரணாப் முகர்ஜிக்கு இரங்கல்’ என்ற ஹேஸ்டேக் உருவாக்கப்பட்டு டிரெண்ட் ஆகி வருகிறது. பிரபல டிவி ஊடக நிருபரும் கூட, பிரணாப் இறந்துவிட்டதாகவும், அறிவிப்பதில் தாமதம் ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும், தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார். அதனை தொடர்ந்து ராணுவ மருத்துவமனை சார்பில் உடனடியாக அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், பிரணாப் முகர்ஜி உடல்நலம் தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ‘எனது தந்தை இன்னும் உயிருடன் இருக்கிறார்; வதந்திகளை நம்ப வேண்டாம்’ என்று பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி தெரிவித்துள்ளார். அதனால், இன்று காலை பரவிய பிரணாப் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.