இன்ஜி. கல்லூரிகள் செப்.12ல் திறப்பு; உயர்கல்வித்துறை முடிவு...பள்ளிகள், கலைக்கல்லூரிகள் பற்றி முடிவு எடுக்கவில்லை
8/7/2025 2:32:08 PM
சென்னை: பொறியியல் கல்லூரிகளில் செப்டம்பர் 12ம் தேதி வகுப்புகளை தொடங்கலாம் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதற்கான ஆலோசனை கூட்டம் உயர்கல்வித்துறையில் இன்று நடந்தது. தமிழகத்தில் கொரோனா பரவத் தொடங்கியதை அடுத்து கடந்த மார்ச் 25ம் தேதி முதல் அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. முதற்கட்டமக ஏப்ரல் 14ம் தேதி ஊரடங்கு முடிந்த பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. படிப்படியாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு தற்போது முடிவுக்கு வருமா வராதா என்ற நிலைஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பல்கலைக் கழக மானியக் குழு, அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக் கழகம் ஆகியவை சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டன. இதன்படி, பல்கலைக் கழக தேர்வுகளை நடத்துவது, பொறியியல் கல்லூரிகளுக்கான கவுன்சலிங் நடத்துவது, வகுப்புகளை தொடங்குவது தொடர்பாக அந்த வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டன.
இதையடுத்து கடந்த மாதம் 15ம் தேதி முதல் பொறியியல் கல்லூரிகளுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பொறியியல் கல்லூரிகளில் வகுப்புகளை எப்போது தொடங்குவது என்பது குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா, தொழில் நுட்பக் கல்விக் கழக இயக்குநர் விவேகானந்தன், அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர் சுரப்பா இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதையடுத்து வெளியான அறிவிப்பு: பொறியியல் கல்லூரிகளில் நடத்தப்படும் இளநிலை, முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான முதல் செமஸ்டர் தவிர்த்து பிஇ, பிடெக் படிப்புகளில்(பகுதி நேரம்) 3, 5, 7 செமஸ்டர்களுக்கான வகுப்புகள் ஆகஸ்ட் 12ம் தேதி தொடங்கும். கடைசி பணிநாள் அக்டோபர் 26ம் தேதி. செய்முறைத் தேர்வுகள் அக்டோபர் 28ம் தேதி தொடங்கும். செமஸ்டர் தேர்வுகள் நவம்பர் 9ம் தேதியுடன் முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த செமஸ்டருக்கான நாள் டிசம்பர் 14ம் தேதி தொடங்கும். இளநிலை, முதுநிலை படிப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு சனிக் கிழமைகளிலும் வகுப்புகள் நடத்தப்படும். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. பொறியியல் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதால், பள்ளிகள், கலைக் கல்லூரிகள் திறப்பு எப்போது என்பது குறித்து தமிழக அரசு இன்னும் முடிவுகளை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.