துறைமுக கிடங்கில் 740 டன் வெடிமருந்து: 5 ஆண்டுகளாக இருப்பு: சென்னைக்கு பேராபத்து: பொதுமக்கள் பீதி
8/6/2025 2:31:23 PM
சென்னை: லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் வெடிவிபத்து ஏற்பட்டு பல நூறு பேர் உயிரிழந்துள்ள நிலையில், சென்னை துறைமுகத்தில் கடந்த 6 ஆண்டு களாக 740 டன் அமோனியம் நைட்ரேட் வெடிபொருள் அபாயகரமான நிலையில் வைக்கப்பட்டுள்ள விபரம் வெளியாகியுள்ளது. இதனால், பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகத்தில் நேற்று முன்தினம் பயங்கரமான வெடி விபத்து ஏற்பட்டது. இதில் நூற்றுக்கும் அதிகமானோர் பலியானார்கள். சுமார் 5 ஆயிரம் பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சுமார் 3 லட்சம் பேர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வீதிக்கு வந்துள்ளனர். அந்த இடம் முழுவதும் பாலைவனம் போல் ஆகிவிட்டது. வீடுகள், கட்டிடங்கள் முழுவதுமாக இடிந்து நாசமானதில் எந்த பொருளும் மிஞ்சவில்லை. அந்த நகரத்தின் ஒரு பகுதி உருக்குலைந்து காணப்படுகிறது.
பெய்ரூட் துறைமுகத்தில் உள்ள குடோன்களில் வைக்கப்பட்டிருந்த 2750 கிலோ அமோனியம் நைட்ரேட் திடீரென வெடித்ததால் இந்த கொடூரமான சம்பவம் நிகழ்ந்தது. சற்றும் எதிர்பாராத வகையில் நடந்த இந்த வெடிவிபத்து உலக நாடுகளை பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியது.
இந்த துன்ப சம்பவம் மக்கள் மனதில் இருந்து மறைவதற்குள் சென்னையிலும் இதுபோன்ற விபத்து ஏற்படுவதற்கான சூழல் ஏற்பட்டுவிடக்கூடாது என்று துறைமுகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
காரணம் கடந்த 2014ல் கரூரை சேர்ந்த ஒரு நிறுவனம் 740 டன் அமோனியம் நைட்ரேட் கெமிக்கலை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து துறைமுகத்திற்கு கொண்டு வந்தது. இந்த அபாயகரமான கெமிக்கல் 37 கண்டய்னர்கள் வைக்கப்பட்டு துறைமுகத்தில் உள்ள குடோன்களில் உள்ளன. இந்த கெமிக்கல் உரிய ஆவணங்கள் இல்லாமல் இறக்குமதி செய்ததால் அவற்றை சுங்கத்துறை பறிமுதல் செய்து வைத்துள்ளது. ஆனால், 6 ஆண்டுகள் ஆகியும் இந்த அபாயகரமான கெமிக்கலை அங்கிருந்து அப்புறப்படுத்தவோ, அழிக்கவோ சுங்கத்துறை எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
லெபனானில் 2013 முதல் ஒரே இடத்தில் வைக்கப்பட்டிருந்து அமோனியம் நைட்ரேட் படிப்படியாக கூடுதல் வெப்பநிலை ஏற்பட்டு வெடிவிபத்து நடந்ததாக ஆய்வுகளில் கூறப்பட்டுள்ளது. சென்னை துறைமுகத்திலும் கடந்த 2014 முதல் இந்த கெமிக்கல் ஒரே இடத்தில் வைக்கப்பட்டுள்ளதால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள இந்த அமோனியம் நைட்ரேட் வெடித்தால் சென்னையில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்திவிடும். இந்நிலையில், பெட்ரோலியம் வெடிபொருள் பாதுகாப்பு கழகம் தற்போது இந்த வெடிபொருள் தொடர்பான விபரங்களையும், பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் ஆய்வு செய்து வருகிறது.
உரத்தொழிற்சாலைக்கு மட்டுமல்லாமல் குவாரி போன்றவற்றில் பயன்படுத்தும் வெடிபொருள்களை தயாரிப்பதற்காகவும் அமோனியம் நைட்ரேட் பயன்படுத்தப்படுவதால் ஏதாவது விபரீதம் ஏற்பட்டு விடக்கூடாது என்று துறைமுக ஊழியர்களும் அதிகாரிகளும் அச்சம் தெரிவித்துள்ளனர்.
லெபனானில் ஏற்பட்ட பெரும் விபத்தின் உக்கிரம் தெரிந்தபிறகும் சென்னை துறைமுகத்தில் பாதுகாப்பில்லாமல் உள்ள அமோனியம் நைட்ரேட் கெமிக்கலை அப்புறப்படுத்தாமல் அதிகாரிகள் இருப்பது சென்னை மக்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.