கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து நாளை, நாளை மறுதினம் மதுரை, திருநெல்வேலி மாவட்டத்தில் முதல்வர் எடப்பாடி நேரில் ஆய்வு: இன்று மதியம் புறப்பட்டு சென்றார்
8/5/2025 2:33:10 PM
சென்னை: தென்மாவட்டங்களில் கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்த மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களுக்கு நாளையும், நாளை மறுதினமும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் ஆய்வு செய்கிறார். இதற்காக இன்று மதியம் சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளையும், நாளை மறுதினமும் திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்கிறார். இதையொட்டி, முதல்வர் இன்று மதியம் 2 மணிக்கு சென்னையில் இருந்து கார் மூலம் சேலம் புறப்பட்டு சென்றார். சேலத்தில் இருந்து நாளை காலை 7.30 மணிக்கு புறப்பட்டு 9.30 மணிக்கு திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் சென்றடைகிறார்.
அங்கு கலெக்டர், வருவாய் மற்றும் சுகாதார துறை அதிகாரிகளுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார். பின்னர் நாளை மதியம் 1.30 மணிக்கு திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து மதியம் 2.30 மணிக்கு மதுரை கலெக்டர் அலுவலகம் செல்கிறார். அங்கு அதிகாரிகளுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்துகிறார். தொழில் முனைவோர்கள் கூட்டத்திலும் முதல்வர் கலந்து கொள்கிறார். இரவு மதுரையில் தங்குகிறார்.
நாளை மறுதினம் (வெள்ளி) காலை 7.30 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு 9.30 மணிக்கு திருநெல்வேலி மாவட்டம் செல்கிறார்.
அங்கு திருநெல்வேலி, தென்காசி மாவட்ட கலெக்டர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை கூட்டம் முடிந்ததும் மீண்டும் சேலம் புறப்பட்டு செல்லும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சனி மற்றும் ஞாயிறு சேலத்திலேயே தங்கி இருக்கிறார். பின்னர் 10ம் தேதி (திங்கள்) காலை புறப்பட்டு சென்னை வருகிறார்.