சுஷாந்த் சிங்கின் காதலியை விசாரிக்க சென்ற போது மும்பை-பாட்னா போலீசாரிடையே மோதல்: பீகார் போலீஸ் எஸ்பி தனிமைப்படுத்தப்பட்டதால் பரபரப்பு
8/3/2025 2:11:37 PM
மும்பை: பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த ஜூன் 14ம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் மும்பையிலுள்ள தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். தொழில்போட்டி, காதல் விவகாரம் போன்ற காரணமாக சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே சுஷாந்த் சிங்கின் தந்தை அளித்த புகாரின்பேரில் தற்கொலைக்கு தூண்டுதல், திருட்டு, மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ், சுஷாந்த் சிங்கின் காதலியான நடிகை ரியா சக்கரபோர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட 6 பேர் மீது பீகார் மாநில பாட்னா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதற்கிடையே பாட்னாவில் தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை மும்பைக்கு மாற்ற வேண்டும் என நடிகை ரியா சக்கரபோர்த்தி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். ஆனால், பீகார் போலீஸ் ‘டீம்’ ரியா சக்கரபோர்த்தியிடம் விசாரணை நடத்த நேற்றிரவு மும்பைக்குச் சென்றது. பீகார் போலீஸ் எஸ்பி பினாய் திவாரி தலைமையிலான டீம் மும்பை சென்று இறங்கியதும், அவர்களை அங்கிருந்த கொரோனா பரவல் தடுப்பு குழு மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால், இருதரப்பு அதிகாரிகள் இடையே வாக்குவாதம் நடைபெற்றதால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதுதொடர்பாக பீகார் போலீஸ் டிஜிபி குப்தேஷ்வர் பாண்டே தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
அதில், ‘ஐபிஎஸ் அதிகாரி பினாய் திவாரி, போலீஸ் டீமுடன் இன்று (நேற்றிரவு) பாட்னாவிலிருந்து ஒரு வழக்கு விசாரணைக்காக மும்பைக்கு சென்றார். ஆனால் அவரை இரவு 11 மணியளவில் மும்பை மாநகர அதிகாரிகள் கொரோனா விதிமுறைகளை காட்டி பலவந்தமாக தனிமைப்படுத்தினர். மேலும், அவர்கள் தங்குவதற்கான ஏற்பாடு செய்யப்படவில்லை. நீண்ட இழுபறிக்கு பின்னர் தற்போது அவர்கள் ஒரு விருந்தினர் மாளிகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்’ என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பீகார் டிஜிபி குப்தேஷ்வர் பாண்டே தனியார் செய்தி நிறுவனத்திடம் அளித்த பேட்டியில், ‘நடிகை ரியா சக்கரபோர்த்தியை நான்கு நாட்களாக காணவில்லை. அவரது தொலைபேசியும் அணைத்து வைக்கப்பட்டுள்ளது. ரியா உரிய ேநரத்தில் விசாரணை அதிகாரிகள் முன் ஆஜராக விரும்புகிறோம். அவரிடம் சில கேள்விகளைக் கேட்க விரும்புகிறோம். சுஷாந்த் வழக்கு குறித்து எவ்வித சார்பும் அற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என்றார்.