79 நாட்களுக்கு பிறகு தரிசனம்; திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை முதல் பக்தர்களுக்கு அனுமதி: மக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு
6/7/2025 3:02:16 PM
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை முதல் உள்ளூர் பக்தர்கள் மற்றும் தேவஸ்தான ஊழியர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். திருப்பதி தேவஸ்தான கூடுதல் செயல் அலுவலர் தர்மா ரெட்டி கூறியதாவது; ஏழுமலையானை, பக்தர்கள் எவ்வித சிரமங்களும் இல்லாத வகையில் தரிசனம் செய்துவிட்டு செல்ல அதிகாரிகள், ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.கோயிலுக்கு வரும் அனைவரும் முக கவசம் அணிந்திருக்க வேண்டும். ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் தனி மனித இடைவெளி கடைபிடிக்க வேண்டும். கோயிலில் தீர்த்தம், சடாரி, சிறிய லட்டுகள் வழங்குவது இருக்காது. அனைத்து பக்தர்களுக்கும் ஒரு இலவச லட்டு வழங்கப்படும். கூடுதல் லட்டுகள் தேவைப்படுவோர் கோயிலுக்கு வெளியே உள்ள கவுன்டரில் ரூ.50க்கு பெறலாம். அன்னபிரசாத கூடத்தில் இதுவரை ஒரேநேரத்தில் 1000 பேர் வரை அமர்ந்து உணவு அருந்திய நிலையில், நாளை முதல் 200 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
வழக்கமாக வழங்கப்பட்டு வந்த சாதம், சாம்பார், ரசம், ேமார், பொரியல் மற்றும் சர்க்கரை பொங்கல் வழங்கப்படமாட்டாது. அதற்கு பதிலாக பிசிபெலாபாத் மற்றும் தயிர்சாதம் வழங்கப்படும். திருமலைக்கு வரும் அனைத்து பக்தர்களையும் அலிபிரியில் உடல் வெப்ப நிலை கண்டறிந்து, சானிடைசர் கொடுத்து கைகளை சுத்தம் செய்த பின்னரே மலைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். அனைத்து வாகனங்களுக்கும் கிருமிநாசினி தெளிக்கப்படும். அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளது. இவ்வாறு கூறினார். திருப்பதி ஏழுமலையான் கோயில் கட்டுப்பாட்டில் உள்ள மற்ற கோயில்களான கோவிந்தராஜ சுவாமி, சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி, திருச்சானூர் பத்மாவதி தாயார், அப்பலாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி, கபிலதீர்த்தம் கபிலேஸ்வர சுவாமி ஆகிய கோயில்கள் நாளை முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
காலை 7.30 மணி முதல் மாலை 6 மணி வரை தரிசிக்கலாம். 1 மணி நேரத்தில் 250 பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். தீர்த்தம், சடாரி கிடையாது. ஆன்லைன் அல்லது 7738286666 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்பி அனுமதி பெறவேண்டும். திருப்பதி கோயிலில் சுமார் 79 நாட்களுக்கு பிறகு பக்தர்கள் நாளை முதல் கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட உள்ளனர். இதைத்தொடர்ந்து வெளியூர் பக்தர்கள் அனுமதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.