‘’எச்சில் துப்பினாலும் விடமாட்டோம்’’ முககவசம் அணியாதவர்களை பிடிக்க பறக்கும் படை தயார்: நீலகிரி கலெக்டர் நடவடிக்கை
6/7/2025 2:58:48 PM
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் முகவசம் அணியாதவர்கள், எச்சில் துப்புவர்களை பிடிக்க பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது: கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு இம்மாதம் 30ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மண்டலத்திற்குள் பொது போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளதால் பொது இடங்களில் மக்களிடம் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அரசு உத்தரவின்படி, கட்டாய முகக் கவசம், சமூக இடைவெளி ஆகியவற்றை மக்கள் பின்பற்ற வேண்டும். மாவட்டத்தில் ஊட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்கள் இதனை பின்பற்றுவதில்லை. இதனால், கொரோனா நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. இதை கண்காணிக்க, நீலகிரி மாவட்டத்தில் அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளில், மக்கள் அதிகளவில் கூடும் பகுதிகளில் பல்வேறு துறை சார்நிலை அலுவலர்கள் அடங்கிய பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இவர்கள் முக கவசம் அணியாதவர்கள், போதிய சமூக இடைவெளியை பின்பற்ற தவறும் நிறுவனங்கள், தனி நபர்கள், பொது இடங்களில் எச்சில் துப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள். அனைத்து தனியார் தங்கும் விடுதிகளும் நேரடியாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. ஆய்வின் போது, விடுதிகள் செயல்படுவது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுப்பதுடன் விடுதி பூட்டி சீல் வைக்கப்படும். விடுதிகள் செயல்படுவது தொடர்பான புகார்களை பொதுமக்கள் சம்பந்தப்பட்ட ஆர்டிஓ., மற்றும் தாசில்தார் ஆகியோருக்கு புகார் தெரிவிக்கலாம். மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் அனைத்து தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் கூறினார்.