கொரோனாவில் இறந்தவர் உடலை 12 அடி சவக்குழிக்குள் தூக்கி வீச்சு: கலெக்டர் நோட்டீஸ்
6/7/2025 2:56:39 PM
புதுச்சேரி: சென்னை ஆயிரம்விளக்கு பகுதியை சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க நபர் (தனியார் கம்பெனி மேலாளர்), ஊரடங்கு காரணமாக புதுச்சேரி வில்லியனூர் கோபாலன்கடையில் உள்ள மாமியார் வீட்டுக்கு மனைவியை பார்க்க வந்திருந்தார். அங்கு நெஞ்சுவலியால் இறந்தார். அவரது உடலை பரிசோதனை செய்தபோது கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதன்பின்னர் பிரேத பரிசோதனை முடிக்கப்பட்டதும் அந்த நபரின் உடல் போலீஸ் பாதுகாப்புடன் ஆம்புலன்ஸ் மூலம் கோபாலன்கடை சுடுகாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆறுமுகம் முன்னிலையில் ஏற்கனவே தயாராக தோண்டி வைக்கப்பட்டு இருந்த 12 அடி குழியில் அடக்கம் செய்யப்பட்டது. புதுச்சேரியில் இறந்த சென்னை கொரோனா நோயாளியின் சடலத்தை கோபாலன்கடை சுடுகாட்டில் சவக்குழியில் அலட்சியமாக வீசி தள்ளி விட்டதாக சமூக வலைதளத்தில் வீடியோ வைரலாகியது.
இதுபற்றி சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு, ‘’உடல் அடக்கம் செய்தபோது ஊழியர் ஒருவரது கை நழுவியதால் உடல் உருண்டு பள்ளத்தில் விழுந்துள்ளது. புதுச்சேரியில் கொரோனாவால் உயிரிழந்தவரை அடக்கம் செய்வது இதுவே முதன்முறை என்பதால், ஊழியர்கள் அச்சம் காரணமாக இது நடந்திருக்கலாம். இனி இதுபோல் சம்பவம் நடக்காமல் இருக்க ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’’ என்றார். கொரோனா பாதித்து உயிரிழந்த நபர்களை எப்படி அடக்கம் செய்ய வேண்டுமென விதிமுறைகள் அடங்கிய நிலையாணை ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த விதிமுறைகள் எதுவும் கடைபிடிக்கப்படவில்லை. எனவே, சென்னை நபரின் சடலத்தை குழிக்குள் தள்ளிவிட்டது தொடர்பாக வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர், அரசு பொது மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு விளக்கம் கேட்டு கலெக்டர் அருண் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.