பாகிஸ்தான் எல்லையில் வீரமரணம்; தமிழக ராணுவ வீரரின் உடல் 21 குண்டுகள் முழங்க அடக்கம்: சொந்த ஊரில் மக்கள் திரண்டனர்
6/7/2025 2:54:56 PM
இடைப்பாடி: ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்த இடைப்பாடி ராணுவ வீரரின் உடல், சொந்த ஊரில் 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகேயுள்ள சித்தூர் ஊராட்சி வெத்தலைகாரன்காடு பகுதியை சேர்ந்தவர் மதியழகன் (40). இவர் கடந்த 21 ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் ஹவில்தாராக பணியாற்றினார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜம்மு காஷ்மீரில் பணியில் இருந்தபோது, பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நுழைந்து நடத்திய தாக்குதலில் மதியழகன் வீரமரணம் அடைந்தார்.
இவரது உடல் நேற்று டெல்லியில் இருந்து நேற்றிரவு 7.50 மணிக்கு அவரது சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது.
உடலை பார்த்து குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் கதறி அழுதனர். பின்னர் அவரது உடல் மீது தேசிய கொடி போர்த்தி, 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதை செலுத்தப்பட்டு, உடல் அடக்கம் செய்யப்பட்டது. சேலம் மாவட்ட கலெக்டர் ராமன், எஸ்பி தீபா கனிகர், திமுக எம்பி பார்த்தீபன், மத்திய மாவட்ட திமுக செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ உள்பட பலர் மரியாதை செலுத்தினர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த ₹20 லட்சத்திற்கான காசோலையை, அவரது குடும்பத்தினரிடம் கலெக்டர் ராமன் வழங்கினார். வீர மரணம் அடைந்த ராணுவ வீரருக்கு தமிழரசி (33) என்ற மனைவியும், 12 வயதில் மகனும், 8 வயதில் மகளும் உள்ளனர்.