அமெரிக்க அதிபர் இந்தியாவில் 2 நாள் முகாம்; டிரம்பால் கொரோனா அதிகரிப்பு: சிவசேனா எம்பி ராவத் குற்றச்சாட்டு
6/1/2025 3:52:50 PM
மும்பை: அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த பிப். 24ந் தேதி இந்தியா வந்தார். பிரதமர் மோடியும், டிரம்பும் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பேரணி நடத்தினர். அதிபர் டிரம்ப், அகமதாபாத், டெல்லி போன்ற நகரங்களில் நடந்த 2 நாள் நிகழ்ச்சியில் பங்கேற்றிவிட்டு, அமெரிக்கா திரும்பினார். அகமதாபாத் மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியின் போது, அங்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் திரண்டு இருந்தனர். இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்பின் வருகை கொரோனா வைரஸ் பரவ காரணமாக அமைந்தது என சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் குற்றம் சாட்டி உள்ளார்.
இதுகுறித்து அவர் சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையில், ‘அமெரிக்க அதிபர் டிரம்பை வரவேற்க பெருமளவில் மக்கள் கூடியதே குஜராத்தில் கொரோனா வைரஸ் பரவ காரணம் என்பதை மறுக்க முடியாது. டிரம்புடன் வந்தவர்கள் பின்னர் மும்பை, டெல்லிக்கும் வந்தனர். இதனால் இந்த நகரங்களிலும் கொரோனா பரவியது. மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி கொண்டு வர வேண்டும் என்று பாஜகவினர் கூறுகின்றனர். கொரோனா பிரச்னையை கையாளும் பிரச்னை தான் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த காரணம் என்றால், பாஜக ஆளும் 17 மாநிலங்களில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்.
மத்திய அரசு கொரோனாவை கட்டுப்படுத்த தவறிவிட்டது. கொரோனாவுக்கு எதிராக போராட அவர்களிடம் எந்த திட்டமும் இல்லை. எந்த திட்டமும் இல்லாமல் ஊரடங்கு பிறப்பித்தனர். தற்போது ஊரடங்கை திரும்ப பெறும் பொறுப்பு மட்டும் மாநிலங்களிடம் வழங்கப்பட்டுள்ளது. இந்த குழப்பங்கள் நிலைமையை மேலும் மோசமடைய செய்யும். கூட்டணிக்குள் சில பிரச்னைகள் இருந்தாலும் எங்கள் அரசுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. 3 கட்சிகளும் இணைந்து ஆட்சி புரிய வேண்டிய கட்டாயம் உள்ளது. முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசுக்கு அடிக்கல் நாட்டிய தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தான் மாநில அரசின் எதிர்காலத்தை கணிக்க முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.