கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் பாதிப்பு 2 லட்சத்தை நெருங்கியது: வீரியம் அதிகரிக்கும் நிலையில் ஊரடங்கை தளர்த்தியது ஏன்?
6/1/2025 3:50:01 PM
புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு அமலுக்கு வந்த மார்ச் 25ம் தேதி 657 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று 1.90 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று வீரியம் அதிகரிக்கும் நிலையில் ஊரடங்கை தளர்த்தியது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்காக கடந்த மார்ச் 24ம் தேதி நாடு முழுவதும் பொது ஊடரங்கு அறிவித்த நிலையில் மார்ச் 25ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. நான்கு கட்டங்களாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு மற்றும் சில தளர்வுகள் நேற்றுடன் முடிந்த நிலையில், இன்று முதல் அதிக தளர்வுகளுடன் கூடிய 5ம் கட்ட ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.
பல மாநிலங்கள் இன்று முதல் பொதுப் போக்குவரத்து மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான பயணங்களை மீண்டும் தொடங்க அனுமதித்து உள்ளன. ஆனால், ஓட்டல்கள், உணவகங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை மீண்டும் திறப்பது குறித்து முடிவுகளை அறிவிக்கவில்லை. அவை மத்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி ஜூன் 8 முதல் திறக்கப்படலாம். டெல்லி, ஆந்திரா, கேரளா இன்னும் புதிய விதிமுறைகளை அறிவிக்கவில்லை. டெல்லி தனது வழிகாட்டுதல்களை இன்று வெளியிடுகிறது. தொற்றுநோய் பாதிப்பு எண்ணிக்கை அதிகமுள்ள மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத் மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் தங்களது சொந்த வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டன.
உத்தரபிரதேசம், தெலங்கானா, பஞ்சாப் மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்கள் இன்று தங்களது வழிகாட்டுதல் விதிகளை அறிவிக்கின்றன. இருந்தும், கொரோனா தொற்றின் வீரியம் ஒருபக்கம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. நாடு முழுவதும் ஊரடங்கு முதல் முறையாக நடைமுறைக்கு வந்தபோது (மார்ச் 25) 657 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. 10 பேர் உயிரிழந்து இருந்தனர். ஆனால், தற்போது இன்றைய (ஜூன் 1) நிலையில் 69 நாளாக ஊரடங்கு இருக்கும் நிலையில் பல மடங்கு நோய் பாதிப்பு அதிகரித்து ஒரு சில நாளில் 2 லட்சத்தை நெருங்கும் வகையில் 1.90 லட்சமாக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 5,408 ஆக அதிகரித்துள்ளது.
இப்படி இருக்கையில், ஊரடங்கைத் தளர்த்தி தொழில்களைத் தொடங்க மத்திய அரசு அனுமதித்தது ஏன்? என்ற கேள்வி எழுகிறது. ஒரு கட்டத்திற்கு மேல், பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும், மனநல ரீதியாகவும் ஊரடங்கை நீட்டிப்பது கடினம் என்ற நிலையில், ஊரடங்கை மத்திய அரசு முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரும், பொருளாதார நிபுணருமான ரகுராம் ராஜன், ‘ஏப்ரல் மாத இறுதியில் ஊரடங்கு தளர்த்தப்பட வேண்டும். ஊரடங்கை மேலும் நீட்டித்தால் இந்தியா பேரழிவை சந்திக்க நேரிடும்’ என்று தெரிவித்தார். மேலும், உலகளாவிய ஆலோசனை அமைப்பான மெக்கின்ஸி, ‘இந்தியா கொரோனா தொற்று பாதிப்புகளோடு,
பொருளாதாரத்தையும் சேர்த்து சமாளிக்க வேண்டும்’ என்று கருத்து தெரிவித்திருந்தது. கடந்த 2 மாதங்களில் பொது அரங்கங்கள், பள்ளிகள் மற்றும் ரயில் பெட்டிகள் தனிமைப்படுத்தப்படும் இடங்களாக மாற்றப்பட்டுள்ளன. கொரோனா பரிசோதனை அதிகப்படுத்தப்பட்டு, பாதுகாப்பு கவசங்களின் தயாரிப்பும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று பரவத் தொடங்கிய ஒருசில வாரங்களில் குறைவான பாதிப்பு மட்டுமே இருந்தது. அடர்த்தியான மக்கள் தொகை உள்ள இடங்களில், நிதி பற்றாக்குறையில் இருக்கும் பொது சுகாதார மருத்துவமனைகள் இருந்த போதிலும், அதிகப்படியான தொற்று பாதிப்போ, உயிரிழப்புகளோ ஏற்படவில்லை.
நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்தாலும், மருத்துவமனைகளில் சிகிச்சை தேவைப்பட வேண்டிய அளவிற்கு தீவிர நோயாளிகள் எண்ணிக்கை குறைவாகதான் உள்ளது. மேலும் மும்பை நகரத்தை தவிர வேறெங்கும் மருத்துவமனைகளில் படுக்கை பற்றாக்குறை ஏதும் ஏற்படவில்லை. மத்திய சுகாதார துறையின் தரவுகளின்படி, கொரோனாவால் பாதித்த மற்ற நாடுகளை விட ஒப்பீட்டளவில் இந்தியாவில் குறைவான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவே கூறுகிறது. உதாரணமாக, இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் 3 சதவீதமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால், 68 நாட்கள் ஊரடங்கு முடிவுக்கு கொண்டு வரப்பட்டு இன்று முதல் (69வது நாள்) பெரும்பாலான தளர்வுகளுடன் இயல்பு வாழ்க்கை ெதாடங்கியது. இந்நிலையில், ஜூலை அல்லது ஆகஸ்டு மாதங்களில்தான் இந்தியாவில் கொரோனா வைரஸ் உச்சத்தை அடையும் என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். அதனால், கொரோனா மீண்டும் உச்சத்தை அடையும்போது மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்படுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. உலகளவில் பார்க்கும் போது பாதிப்பு பட்டியலில் இந்தியா 7வது இடத்தை தொட்டுள்ளது. இறப்பு பட்டியலில் 13வது இடத்தையும், குணமடைந்தோர் பட்டியலில் 9வது இடத்தையும், சீரியஸ் நோயாளிகள் பட்டியலில் 2வது இடத்தையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.