மாணவிகளுக்கு பாலியல் டார்ச்சர்: ஆசிரியர் தப்பியோட்டம்
3/18/2020 3:31:48 PM
குஜிலியம்பாறை: மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து தப்பியோடிவிட்ட ஆசிரியரை போலீசார் தேடி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அருகே ஆர்.கோம்பை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பட்டதாரி கணித ஆசிரியராக பணியாற்றுபவர் செந்தில்குமரன் (51). இவர், கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாணவ, மாணவிகளிடம் தகாத வார்த்தைகளால் பேசி, மனரீதியாக பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இது குறித்து மாணவ, மாணவிகள், பள்ளி தலைமையாசிரியரிடம் புகார் தெரிவித்தனர். இது குறித்து மாவட்ட குழந்தை நலவாரிய அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது.
விசாரணையில் மாணவ, மாணவிகளிடம் ஆசிரியர் செந்தில்குமரன் மனரீதியாக பாலியல் தொந்தரவு கொடுத்தது உண்மை என தெரியவந்தது. இதையடுத்து தலைமையாசிரியர் சுப்புராஜன், எரியோடு போலீஸ் ஸ்டேஷனில் இது குறித்து புகார் செய்தார். இதன் அடிப்படையில் நேற்று முன்தினம் இரவு, போக்சோ சட்டத்தில் ஆசிரியர் செந்தில்குமரன் மீது எரியோடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையறிந்த செந்தில்குமரன் தலைமறைவாகி விட்டார். அவரை தேடி வருகின்றனர்.