சர்ச், மருத்துவமனை கட்டுவதாக கூறி பேஸ்புக் மூலம் பல லட்சம் சுருட்டல்: நைஜீரியாவை சேர்ந்தவர் உட்பட 3 பேர் கைது
2/27/2020 3:45:05 PM
திருமலை: ஆந்திர மாநிலம் ஓங்கோல் பகுதியை சேர்ந்தவர் அச்சய்யா. இவருக்கு கடந்தாண்டு நைஜீரியாவை சேர்ந்த பீட்டர் டேனியல் என்பவர் பேஸ்புக் மூலம் நண்பரானார். அப்போது பீட்டர் டேனியல், தான் டி.பி.ஜோஷ்வா மிஷனரிஸ் என்ற பெயரில் தேவாலயம் மற்றும் மருத்துவமனை கட்ட உள்ளதாகவும் இதற்கு பண உதவி செய்தால் 20 சதவீத கமிஷன் வழங்குவதாகவும் தெரிவித்து உள்ளார். இந்தநிலையில் ‘நான் இந்தியா வந்துள்ளேன், விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் என்னை சந்தேகத்தின்பேரில் பிடித்துக்கொண்டனர். என்னிடம் 2.4 மில்லியன் டாலர் உள்ளது. சுங்க இலாகாவிற்கு பணம் செலுத்தவேண்டி உள்ளது’ என அச்சய்யாவிடம் கூறியுள்ளார். இதையடுத்து அச்சய்யா, பீட்டர் டேனியலின் வங்கி கணக்கில் ₹3 லட்சத்தை செலுத்தியுள்ளார்.
பல்வேறு காரணங்களை கூறிய பீட்டர் டேனியலின் பேச்சை நம்பிய அச்சய்யா மேலும் 11.67 லட்சத்தை பீட்டர் டேனியல் வங்கிக்கணக்கில் செலுத்தியுள்ளார். ஆனால் அதன்பிறகு பீட்டர் டேனியல், பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப்பில் தொடர்பை துண்டித்துள்ளார். தொடர்ந்து செல்போனிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. எனவே தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அச்சய்யா, கடந்த ஜனவரி 6ம்தேதி பிரகாசம் மாவட்ட போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் விசாரித்தபோது பீட்டர் டேனியலின் போன் சுவிட்ச் ஆப் ஆகியிருந்ததால், அவரது வங்கி கணக்கு எண்ணின் விவரங்களை தனிப்படையினர் ஆய்வு செய்தனர். அதில், உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியை சேர்ந்த சாதிக்கான் மற்றும் முகமது யாகூப் ஆகியோருக்கு சொந்தமான வங்கிக்கணக்கு என தெரியவந்தது. இதனை தொடர்ந்து தனிப்படையினர் உத்தரபிரதேசத்தில் 16 நாட்கள் முகாமிட்டு சாதிக்கான், முகமதுயாகூப் ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.
அப்போது, பீட்டர் டேனியல் பலரிடம் பணம் மோசடி செய்வதற்காக சாதிக்கான் மற்றும் முகமது யாகூப்பின் வங்கிக் கணக்குகளை பயன்படுத்தி வந்துள்ளார். இதற்காக 2 பேருக்கும் 1 லட்சத்திற்கு 10 ஆயிரத்தை பீட்டர் கமிஷனாக கொடுத்துள்ளார். இதையடுத்து சாதிக்கான், முகமது யாகூப்பை கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவல்படி, டெல்லியில் இருந்த பீட்டர் டேனியலையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5 செல்போன், 9 ஏடிஎம் கார்டுகள், 22 காசோலை புத்தகம், நைஜீரிய நாட்டு குடியுரிமை அடையாள அட்டை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கைதான 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஓங்கோலுக்கு அழைத்து வந்தனர். அங்கு நடத்திய விசாரணையில், பீட்டர் டேனியல் 2012ம் ஆண்டு கால்பந்து பயிற்சியாளர் எனக்கூறி இந்தியாவிற்கு வந்துள்ளார். ஆனால் விசா காலம் முடிந்தும் இந்தியாவில் தங்கி பல்வேறு சைபர் கிரைம் மோசடியில் ஈடுபட்டு வந்தார். கடந்த 2015ம் ஆண்டு டெல்லி போலீசாரிடம் கைதாகி திகார் சிறையில் இருந்த இவர் சிறையில் இருந்து வந்து தேவாலயம் மற்றும் மருத்துவமனை கட்ட இருப்பதாக மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.