ஊட்டி பெண் எழுத்தாளருக்கு சாகித்ய அகாடமி விருது
2/27/2020 3:30:05 PM
ஊட்டி: ஊட்டியை சேர்ந்த சூசன் டேனியல் என்ற பெண் எழுத்தாளருக்கு 2019ன் சிறந்த மொழி பெயர்ப்பிற்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மைசூரு பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கிய பேராசிரியையாக பணியாற்றி வந்தவர் சூசன் டேனியல். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு தன் பணியை ராஜினாமா செய்துவிட்டு தனது கணவனின் ஊரான ஊட்டியில் குடியேறினார். இதன்பிறகு இலக்கிய பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்தார். தேவனூர் மகாதேவா என்ற எழுத்தாளர் கன்னடத்தில் இயற்றிய ‘குசும பாலே’ என்ற நாவலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தமைக்காக சாகித்ய அகாடமி விருதை பெற்றுள்ளார். இதுகுறித்து சூசன் கூறியதாவது: ஒரு படைப்பிற்கு கிடைக்கும் மிகப் பெரிய அங்கீகரமான சாகித்ய அகாடமி விருது எனக்கு கிடைத்துள்ளது. என்னைப் பொருத்தவரை பெண்களே முதல் தலித்துக்கள். வீடு முதல் பணியிடம் வரை எல்லா இடங்களிலும், எல்லா மட்டத்திலும் பெண்களுக்கு சம உரிமை மறுக்கப்படுகிறது.
எனக்கு தாய்மொழி மலையாளமாக இருந்தாலும் தமிழை செவி வழி கேட்டே கற்றுக் கொண்டேன். பள்ளி முதல் கல்லூரி வரை கன்னடத்தில் படித்தேன். சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் கன்னட மொழியில் எழுதப்பட்டிருந்த ஒரு சிறிய நாவலை வாசிக்க துவங்கினேன். 110 பக்கத்தை மட்டுமே கொண்டிருந்த அந்த நாவல் எனக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ‘குசும பாலே’ என்ற தலைப்பைக் கொண்ட அந்த நாவல் தலித் இளஞனை மைய கதாபாத்திரமாக கொண்டது. அவனின் காதல் முதல் அவன் கொலைசெய்யப்பட்டப்பின் தவிக்கும் அவனின் காதலியின் தவிப்புவரை அத்தனையும் கண்முன் நிறுத்தியிருந்தார் எழுத்தாளர் தேவனூர் மகாதேவா. இந்த நாவலை மொழி பெயர்க்க வேண்டும் என்ற நீண்ட நாள் எண்ணம் இருந்தது. இந்த நாவலை பொது வெளிக்கு கொண்டு செல்ல ஆங்கிலம் மட்டுமே ஒரு வழியாக இருந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாவலாசிரியரிடம் அனுமதி கேட்க அவரும் சம்மதித்தார். அதனை தொடர்ந்து அந்த நாவலை ஆங்கிலத்தில் ெமாழி பெயர்த்தேன். அதற்கு 2019ம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது.இவ்வாறு கூறினார்.