டிஎன்பிஎஸ்சிமுறைகேடுகளை தொடர்ந்து அடுத்த மோசடி அம்பலம்: 1000 பேருக்கு போலீஸ் வேலை நிராகரிப்பு...போலி சான்றிதழ் தந்து பணியில் சேர முயன்றது கண்டுபிடிப்பு
2/9/2025 2:29:06 PM
சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய மெகா முறைகேடுகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலி சான்றிதழ்களை கொடுத்து போலீஸ் வேலையில் சேர முயன்றது இப்போது அம்பலமாகியுள்ளது. போலி சான்றிதழ்களை கொடுத்து போலீஸ் வேலையில் சேர முயன்ற 1000 பேருக்கு பணி மறுக்கப்பட்டுள்ளது. தற்போது இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த 2016ம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய(டிஎன்பிஎஸ்சி) குரூப்2ஏ, குரூப் 4 போட்டித் தேர்வுகளில் பெரும் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. சமீபத்தில் நடந்த போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியல்களை டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட போது, ராமேஸ்வரம் தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய சுமார் 99 பேர் தெரிவுப் பட்டியலில் முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளனர். இது குறித்து டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் போட்டியிட்ட சக நபர்கள் சந்தேகம் எழுப்பினர். ஆனால் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் இது குறித்து கண்டுகொள்ளவே இல்லை.
மேலும் மேலும் பல புகார்கள் வந்த பிறகும் இது குறித்து அக்கறை செலுத்தாமல் இருந்த அதிகாரிகள், பத்திரிக்கைகளில் செய்தி வெளியானதும் விழிப்படைந்து, சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அந்த விசாரணைக்கு பிறகு, ராமேஸ்வரம் தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய நூற்றுக்கணக்கானவர்கள் ேதர்ச்சி அடைந்துள்ளது தெரியவந்தது. இந்த தேர்வில் தேர்வு மையங்களை மாற்றிப் போட்டு தேர்வு எழுத வைத்து அவர்களின் விடைத்தாளில் திருத்தம் செய்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, சிபிசிஐடி போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், சித்தாண்டி என்பவர்தான் இதற்கு முக்கிய காரணம் என்று தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதிய நபர்களிடம் இருந்து பல லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு அவர்களை தேர்ச்சி அடைய வைத்துள்ளது தெரியவந்தது. இந்த முறைகேட்டில் ஈடுபட்ட 39 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதையடுத்து குரூப் 2 போட்டித் தேர்விலும் இது போல முறைகேடுகள் நடந்துள்ளது தெரியவந்துள்ளது. டிஎன்பிஎஸ்சி நடத்திய போட்டித் ேதர்வுகளில் கடந்த 2016ம் ஆண்டு முதல் இது போன்ற முறைகேடுகள் நடந்துள்ளதாக இப்போது தெரியவந்துள்ளது. மேலும், இந்த முறைகேடுகள் காலம்காலமாக நடப்பதாக கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். டிஎன்பிஎஸ்சி மெகா முறைகேடு பரபரப்பு இன்னும் அடங்காத நிலையில் சீருடைப் பணியாளர் தேர்விலும் மோசடி நடந்துள்ளது தற்ேபாது அம்பலமாகியுள்ளது. திருடர்களை பிடிக்க வேண்டிய பணியில் ஈடுபடும் போலீஸ் பணியில் சேர போட்டித் தேர்வு எழுதியோரில் 1000 பேர் போலி சான்றிதழ்களை கொடுத்து போலீஸ் பணியில் சேர முயற்சி செய்துள்ளனர். அவர்கள் எழுத்து மற்றும் உடல் தகுதி தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருந்தாலும், போலி சான்றிதழ்களை கொடுத்த விவகாரத்தால் பணி மறுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் கிரேடு 2 போலீஸ் கான்ஸ்டபிள், கிரேடு 2 சிறைக் காவலர்கள் மற்றும் துப்பாக்கி சுடுவோர் என 8888 பணியிடங்களுக்கு ஆள் எடுக்கப் போவதாக கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கான போட்டித் தேர்வு தமிழகம் முழுவதும் நடந்தது. அதற்காக 32 மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டது. அவற்றின் மூலம் 3 லட்சத்து 25 ஆயிரம் பேர் போட்டித் தேர்வில் பங்கேற்றனர். இதையடுத்து, இந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற 47 ஆயிரம் பேருக்கு 15 மையங்களில் உடல் திறன் தேர்வு நடந்தது. அதில் 8800 பேர் பணி நியமனம் பெறத் தகுதியானவர்களாக தெரிவு செய்யப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர்.
மேற்கண்ட போலீஸ் தேர்வில் பணி நியமனம் செய்யப்படுவோரில் 10 சதவீதம் பேருக்கு விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் பணி நியமனம் வழங்கப்பட வேண்டும் என்ற விதியின் கீழ் 1000 பேர் விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டின் கீழ் பணி ஒதுக்க வேண்டும் என்றும் கோரியிருந்தனர். அதற்கான தகுதிச் சான்றிதழ்களையும் கொடுத்திருந்தனர். மேற்கண்ட 1000 பேருக்கு, விளையாட்டு வீரர்களுக்கான தகுதிச் சான்றிதழ்களை வழங்கிய சங்கங்கள் எதுவும் அங்கீகாரம் பெறாத போலியானவை என்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துவிட்டது. மேலும், அந்த சங்கங்கள் மூலம் விளையாட்டு போட்டிகள் எதுவும் நடத்தப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தில் இருந்து மேற்கண்ட 1000 பேருக்கும், தாங்கள் கொடுத்துள்ள சான்றிதழ்கள் அனைத்தும் தகுதியற்றவை என்றும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அங்கீகாரம் பெறவில்லை என்றும் இ-மெயில் மூலம் தெரிவிக்கப்பட்டது. அதனால், விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டின் கீழ் பணி நியமனம் வழங்குவது தொடர்பாக ஆய்வு செய்ய வேண்டியுள்ளது என்று தெரிவித்துவிட்டது. அதனால் அவர்கள் பொதுப் பிரிவு மற்றும் இட ஒதுக்கீட்டு அடிப்படையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர். மேற்கண்ட 1000 பேரில் 200 பேரின் மதிப்பெண்கள் இட ஒதுக்கீட்டுக்காக நிர்ணயிக்கப்பட்ட கட்ஆப் மதிப்பெண்கள் பெற்றுள்ளதாக தெரிகிறது. மற்ற 800 பேரும் பணி நியமனத்துக்கான தகுதி பெறவில்லை.
இதையடுத்து, மேற்கண்ட 1000 பேருக்கும் தகுதிச் சான்றிதழ்கள் வழங்கிய சங்கங்களிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். இதுவரை அறியப்படாத பெயரில் இயங்கி வரும் சில விளையாட்டு சங்கங்கள் தமிழகத்தின் பக்கத்து மாநிலங்களில் தாங்கள் விளையாட்டுப் போட்டிகளை நடத்தியதாகவும், அதில் தமிழ்நாடு இன்டர்-ஸ்டேட்டாக சேர்க்கப்பட்டு சான்றிதழ் வழங்கியுள்ளனர். இவை அனைத்தும் முறைகேடாகவோ பணம் பெற்றுக் கொண்டோ வழங்கப்பட்டிருந்தால் அந்த சங்கங்கள் மீது முறையான, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த விவகாரம் குறித்து புகார் எதுவும் வராததால் குற்றவியல் விசாரணை நடத்த போலீசார் இன்னும் முடிவு செய்யவில்லை என்று தெரிகிறது.
இருப்பினும் தேர்வு எழுதிய சில நபர்கள் வேலூரில் இயங்கி வரும் ஒரு குறிப்பிட்ட மையத்தில் பயிற்சி பெற்றவர்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் அந்த தகவல் ஆதாரமற்றது என்று கூறப்படுகிறது. ஆனாலும், எழுத்துத் தேர்வில் வழங்கப்பட்ட ஓஎம்ஆர் விடைத்தாள் தொடர்பாக ஆய்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதில் ஏதாவது முறைகேடு நடந்துள்ளதா என்று தீவிரமாக ஆராய வேண்டியுள்ளது. இந்நிலையில், சீருடைப் பணியாளர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் 2432 பெண்கள், திருநங்கையர் உள்பட மொத்தம் 8773 பேர் தகுதி பெற்றுள்ளனர். இவர்களுக்கான பயிற்சி விரைவில் தொடங்க உள்ளது. இந்நிலையில்தான் இந்த பிரச்னை எழுந்துள்ளது. எனவே வெளிப்படைத் தன்மையுடன் பணி நியமனம் வழங்க வேண்டும் என்றால் மேற்கண்ட தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியல்கள், பணி நியமனத்துக்கு தகுதி பெற்றவர்கள் ஆகியோரின் மதிப்பெண்களுடன் கூடிய பட்டியல்களை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய இணைய தளத்தில் வெளியிட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.