புதிய கிரிக்கெட் மைதானம் திறப்பு: சேலத்தில் ஐபிஎல் போட்டிகள் நடத்த அரசு உதவி செய்யும்...முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
2/9/2025 2:25:19 PM
சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகேயுள்ள காட்டுவேப்பிலைப்பட்டியில், சேலம் மாவட்ட கிரிக்கெட் சங்கம் மற்றும் சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் சார்பில் 16 ஏக்கர் பரப்பளவில் புதிய கிரிக்கெட் மைதானம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று காலை நடந்தது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு, புதிய கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்து பேசியதாவது: அதிமுக அரசு, கல்விக்கு வழங்குகின்ற முக்கியத்துவம் போல், விளையாட்டிற்கும் முக்கியத்துவம் வழங்கி வருகிறது. விளையாட்டிற்கு தேவையான உட்கட்டமைப்புகளை ஏற்படுத்தி, திறமையான வீரர்களை உருவாக்கி தேசிய, சர்வதேச போட்டிகளில் பங்கேற்க செய்கிறோம். விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கியுள்ளோம். பொதுத்துறை நிறுவனங்களில் சிறந்த வீரர்களுக்கு பதவிகள் அளிக்கப்பட்டு வருகிறது. ஒலிம்பிக், ஆசிய, காமன்வெல்த், தெற்காசிய போட்டிகளில் வீரர்கள் பங்கேற்க வசதியாக சிறந்த வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குகிறோம்.
இன்றைய காலக்கட்டத்தில் கிரிக்கெட் விளையாட்டின் மீது கிராமப்புற இளைஞர்கள் அதிக ஆர்வத்துடன் உள்ளனர். அவர்களை ஊக்கப்படுத்த இம்மாதிரி மைதானங்கள் உதவும். மாநில அணிக்கும், இந்திய அணிக்கும் கிராமப்புற இளைஞர்கள் விளையாடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில், 3 கேலரிகளை திறப்பதில் இருந்த பிரச்னைகளை அரசு கலைந்துள்ளது. அதனால், விரைவில் அந்த கேலரிகளை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சரிசெய்து, அனைத்து அரங்குகளையும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இந்திய கிரிக்கெட் சங்க முன்னாள் தலைவர் சீனிவாசன், இந்த மைதானம் மிக சிறப்பாக அமைந்திருப்பதாக கூறியிருக்கிறார். அதேபோல், ஐபிஎல் போட்டிகள் நடக்கவும் ஏற்பாடு செய்வதாக தெரிவித்துள்ளார். சேலம் மைதானத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடக்க அரசு துணை நின்று, தேவையான உதவிகளை செய்து கொடுக்கும். இவ்வாறு முதல்வர் பேசினார்.
தொடர்ந்து, புதிய மைதானத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வீரர்களுடன் கிரிக்கெட் விளையாடினார். ராகுல் டிராவிட் பந்து வீச, முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டிங் செய்தார். இவ்விழாவில் அமைச்சர்கள் செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில், ராகுல் டிராவிட் பேசுகையில், “அடுத்த தலைமுறை கிரிக்கெட் வீரர்கள், சிறு நகரங்கள், கிராமபுறங்களில் இருந்து உருவாக இதுபோன்ற மைதானங்கள் உதவியாக இருக்கும். திருநெல்வேலி, கோவை, திண்டுக்கல்லில் மைதானங்கள் இருக்கும் நிலையில், தற்போது சேலத்தில் மைதானம் உருவாகி இருப்பது மகிழ்ச்சியை தருகிறது. எதிர்காலத்தில் வீரர்களுக்கு பயிற்சி அளிக்க நான் இங்கு வருவேன்’’ என்றார்.
கால்நடை ஆராய்ச்சி பூங்காவுக்கு அடிக்கல்
சேலம் மாவட்டம் தலைவாசலில் ரூ.1000 கோடியில் சர்வதேச தரத்தில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக்கல்லூரி அமைக்கப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று காலை தலைவாசல் வி.கூட்ரோட்டில் நடந்தது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு, சர்வதேச தரத்தில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக்கல்லூரி கட்ட அடிக்கல் நாட்டினார்.