வங்க கிரிக்கெட் சங்கத்தில் டால்மியா மகன், கங்குலி அண்ணனுக்கு புது பதவி
2/6/2025 3:40:06 PM
கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் கவுன்சில் (பிசிசிஐ) முன்னாள் தலைவர் ஜக்மோகன் டால்மியாவின் மகன் அவிஷேக் டால்மியா (38), மேற்குவங்க மாநிலத்தின் வங்க கிரிக்கெட் சங்கத்தின் (சிஏபி) புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவிஷேக்குடன், சிஏபியின் புதிய செயலாளராக சினேகாஷ் கங்குலியும் தேர்ந்தெடுக்கப்பட்டார். சினேகாஷ் கங்குலி பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியின் மூத்த சகோதரர் ஆவார். கடந்த 2019 அக்டோபரில், பி.சி.சி.ஐ தலைமையகத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்த ஒரே வேட்பாளர் கங்குலி என்பது குறிப்பிடத்தக்கது. கங்குலி பிசிசிஐ தலைவராக செப்டம்பர் 2020 வரை மட்டுமே பணியாற்றுவார். ஏற்கனவே, மேற்குவங்க மாநிலத்தின் வங்க கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக கங்குலி இருந்தார். செயலாளர் சினேகாஷ், இணைச் செயலாளர் டெபப்ரதா தாஸ், பொருளாளர் டெபாசிஷ் மற்றும் துணைத் தலைவர் நரேஷ் ஓஜா ஆகியோருடன் இணைந்து புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட அவிஷேக், நிருபர்களிடம் கூறுைகயில், “நாங்கள் அனைவரும் ஒன்றாக பணியாற்றுவது மிகவும் முக்கியம். வங்க கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருப்பது மிகவும் மரியாதைக்குரிய விஷயம். கிரிக்கெட் என்பது கூட்டு குழு முயற்சி. ஒன்றாக இணைந்து செயல்படுவோம்’’ என்றார்.