பாஜக நிர்வாகிக்கு மிரட்டல் சுயேட்சை எம்எல்ஏ கைது: கோவாவில் பரபரப்பு
2/6/2025 3:30:27 PM
பனாஜி: பாஜக செய்தித் தொடர்பாளரை மிரட்டியதாக, கோவா மாநில சுயேட்சை எம்எல்ஏ கைது செய்யப்பட்டு இன்று காலை விடுவிக்கப்பட்டார். கோவா மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் பிரேமானந்த் மஹாம்பிரே என்பவருக்கு, சுயேட்சை எம்எல்ஏ ரோஹன் கவுண்டே என்பவர் மிரட்டல் விடுத்ததாக கூறப்பட்டது. இதுதொடர்பாக பிரேமானந்த் மஹாம்பிரே, மாநில சட்டமன்ற சபாநாயகர் ராஜேஷ் பட்னேகரிடம் புகார் அளித்தார். அதேபோல், கோவா போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது. அதையடுத்து, எம்எல்ஏ-வை கைது செய்ய கோவா காவல்துறை, சட்டமன்ற சபாநாயகரிடம் முன் அனுமதி கேட்டனர்.
அவரது அனுமதியின் பேரில், வடக்கு கோவா மாவட்டத்தின் போர்வோரிமில் உள்ள அவரது வீட்டில் நேற்று நள்ளிரவு ரோஹன் கவுண்டேவை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து, போர்வோர்மி போலீஸ் டிஎஸ்பி எட்வின் கோலாகோ கூறுகையில், ‘‘பிரேமானந்த் மஹாம்பிரேவுக்கு மிரட்டல் விடுத்த புகாரில், ரோஹன் கவுண்டே நேற்றிரவு கைது செய்யப்பட்டு இன்று காலை விடுவிக்கப்பட்டார்’’ என்றார்.