நர்சுடன் கணவனுக்கு தொடர்பு காவல்நிலையத்தில் மனைவி தர்ணா: புளியந்தோப்பில் பரபரப்பு
2/6/2025 3:11:41 PM
பெரம்பூர்: நர்சுடன் தொடர்பில் உள்ள கணவனை மீட்டுத்தரவேண்டும் என்று காவல்நிலையத்தில் மனைவி தர்ணா நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை புளியந்தோப்பு, 3வது தெருவை சேர்ந்தவர் ரபீக்பாஷா (30). இவர் சென்ட்ரல் அருகே அல்லிக்குளம் பகுதியில் துணிக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ஆயிஷா பர்வீன் (25). இவர்களுக்கு கடந்த 8 வருடத்துக்கு முன் திருமணம் நடந்தது.
நேற்று காலை ஆயிஷா பர்வீன், புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரில், ‘’தனது கணவனுக்கும் நர்ஸ் வேலை செய்து வரும் ரேஷ்மா பேகத்துக்கும் தொடர்பு உள்ளது. இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும்” என குறிப்பிட்டிருந்தார். இதன் அடிப்படையில், நேற்று மாலை இருதரப்பினரையும் போலீசார் அழைத்து விசாரித்தனர். இதில் ஆயிஷா பர்வீனுக்கு நியாயம் கிடைக்கவில்லை. இதனால் விரக்தியடைந்த ஆயிஷா பர்வீன், புளியந்தோப்பு காவல்நிலையம் முன்பு உறவினர்கள் 5 பேருடன் தர்ணாவில் ஈடுபட்டார்.
போலீசார் அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார், ‘’ உங்கள் பிரச்னை தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று உறுதி கூறினர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.