மாணவனை செருப்பால் அடித்த தலைமை ஆசிரியர் மீது வழக்கு
2/4/2025 4:34:19 PM
சாத்தான்குளம்: சாத்தான்குகுளம் அருகேயுள்ள முதலூரில் அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது. தலைமையாசிரியராக லிவிங்ஸ்டன் என்பவர் பணியாற்றி வருகிறார். இங்கு முதலூர் 2வது தெரு ஜெயசெல்வன் ராஜ்குமார் மகன் ஆல்வின் இமானுவேல்(15) என்பவர் 10ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று (திங்கள்) பள்ளி மரத்தடியில் வகுப்பு நடந்து கொண்டிருந்தது. அப்போது மாணவர் ஆல்வின் இமானுவேல், சக மாணவர் மணிகண் டனிடம் பேசியதாக தெரிகிறது.
இதுதொடர்பாக ஆல்வின் இமானுவேலை, தலைமையாசிரியர் லிவிங்ஸ்டன், அவதூறாக பேசி கண்டித்ததுடன் செருப்பால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. தாக்குதலில் காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து அவரது பெற்றோர் அளித்த புகாரின்பேரில் தலைமையாசிரியர் லிவிங்ஸ்டன் மீது தட்டார்மடம் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.