ஆமை வேக பவுலிங்: இந்திய அணிக்கு அபராதம்
2/4/2025 3:44:45 PM
மும்பை: நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றாலும்கூட, இப்போட்டியில் இந்திய அணி வீரர்கள் குறிப்பிட்ட நேரத்தில் ஓவர்களை போடாமல், தாமதமாக பவுலிங் செய்தனர். வழக்கமாக குறிப்பிட்ட நேரத்துக்குள் வீச வேண்டிய ஓவர்களைவிட இந்திய அணி பவுலர்கள் 1 ஓவர் குறைவாக பவுலிங் செய்தனர். இதனை, நடுவர் கிறிஸ் பிராட் உறுதி செய்ததால், இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் போட்டி சம்பளத்தில் இருந்து 20 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஐசிசி வீரர்களின் நடத்தை விதிகளின்படி கொடுக்கப்பட்ட நேரத்தில் குறிப்பிட்ட ஓவர்கள் வீசத்தவறும் பட்சத்தில் வீரர்களுக்கு 20 சதவீதம் அபராதம் விதிக்கப்படும். நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி ஆமை வேகத்தில் ஓவர் போட்டதால், 20 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ரோஹித் ஷர்மா தவறை ஒப்புக்கொண்டதால் நேரில் விசாரணைக்கு ஆஜராக வேண்டிய அவசியமில்லை’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.