சீனாவில் அனைத்து விளையாட்டும் ரத்து ஊக்கமருந்து மையத்துக்கு பூட்டு...சர்வதேச போட்டிகள் நடத்த முடியாததால் சிக்கல்
2/4/2025 3:44:11 PM
பிஜீங்: சர்வதேச ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பானில் ஜூலை 24ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், சீனாவில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தாக்குதலால் நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகி வருகின்றனர். ஒலிம்பிக் போட்டிக்கு இன்னும் 6 மாதங்கள் உள்ள நிலையில் சீனாவின் ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம் (சைனாடா), தற்காலிகமாக அந்நாட்டு வீரர்களுக்கான ஊக்கமருந்து சோதனையை நிறுத்திவிட்டதாக சர்வதேச ஊக்கமருந்து சோதனை நிறுவனம் (ஐடிஏ) தெரிவித்துள்ளது. இதனால், இம்மையம் தற்காலிகமாக மூடப்பட்டது. ஐடிஏ அறிக்கையில், ‘விளையாட்டு வீரர்கள் அல்லது சோதனை அதிகாரிகளுக்கு ஆபத்து ஏற்படாதவாறு சீனாவில் நிலைமை எச்சரிக்கையான நிலையில் உள்ளது.
ஊக்கமருந்து எதிர்ப்பு நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் அதே வேளையில், அனைவருக்கும் பொது சுகாதாரத்தை பராமரிப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. சீனாவில் நிலைமை மேம்பட்டவுடன் படிப்படியாக மீண்டும் சோதனை தொடரும். அரசே இந்த சோதனைகளை நடத்தி வரும்நிலையில், தனியார் அமைப்பு மூலம் சோதனை நடத்த முடியுமா? என்று ஆலோசிக்கப்படுகிறது’ என்று தெரிவித்துள்ளது. சீனாவில் அனைத்து விளையாட்டு நிகழ்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அனைத்து உள்நாட்டு கால்பந்து போட்டிகள், சர்வதேச தடகள சாம்பியன்ஷிப், டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை மற்றும் பெண்களின் கூடைப்பந்து தகுதி மற்றும் சைக்கிள் ஓட்டுதல் ஹைனான் ஆகியவை அடங்கும். ஸ்னூக்கரின் சீனா ஓபன், பூப்பந்து சீனா மாஸ்டர்ஸ் மற்றும் கோல்ப் எல்பிஜிஏ ப்ளூ பே போட்டி ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன. மார்ச் 21 அன்று நடக்கவிருந்த சீன பார்முலா இ கிராண்ட் பிரிக்ஸ் போட்டியும் ரத்து செய்யப்பட்டது.