கேரளாவில் கொரோனா பாதிப்பால் பேரிடர் அறிவிப்பு எதிரொலி: நாடு முழுவதும் விமான நிலையங்கள் சர்வதேச துறைமுகங்கள் கண்காணிப்பு...5 மத்திய அமைச்சக துறைகள் ஒருங்கிணைப்பு
2/4/2025 2:31:42 PM
புதுடெல்லி: கேரளாவில் கொரோனா பாதிப்பால் பேரிடர் அறிவிப்பு வெளியிட்ட நிலையில், 5 மத்திய அமைச்சக துறைகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் 21 விமான நிலையங்கள், சர்வதேச துறைமுகங்கள் கண்காணிக்கப்படுவதோடு மாநில அரசுகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. சீனாவில் இதுவரை 425 பேர் பலியானதால் அமெரிக்காவின் உதவியை சீனா நாடியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலால் சீனாவின் பலி எண்ணிக்கை 425 ஆக அதிகரித்துள்ளது. கிட்டதிட்ட கடந்த 24 மணி நேரத்தில் 64 பேர் பலியாகி உள்ளதாக தேசிய சுகாதார ஆணைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதியதாக இறந்தவர்கள் அனைவரும் மத்திய ஹூபே மாகாணத்தை சேர்ந்தவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகளவில் பலி எண்ணிக்கை சீனாவுடன் சேர்த்து 427 ஆக உயர்ந்துள்ளது. முன்னதாக உலக சுகாதார அமைப்பு கடந்த சில நாட்களுக்கு கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, உலகளாவிய சுகாதார அவசரநிலையை அறிவித்துள்ளது. இருப்பினும், வைரஸ் பாதிப்பால் இறந்தவர்களின் ரத்த மாதிரிகள் தொடர்பான அறிக்கையின்படி நோய்க்கிருமியை பற்றி இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. சீனாவில் மொத்த வைரஸ் பாதிப்பு அடைந்தவர்கள் பட்டியலின் எண்ணிக்கை 3,235 பேர் கூடுதலாக அதிகரித்து 20,438 ஆக உயர்ந்துள்ளது. மேலும் அமெரிக்கா, ஜப்பான், தாய்லாந்து, ஹாங்காங், பிரிட்டன், இந்தியா உள்ளிட்ட 23 நாடுகளில் குறைந்தது 151 கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் பரவல் விவகாரத்தில், அமெரிக்கா சர்வதேச நாடுகளிடையே பீதியைக் கிளப்பியதாக சீனா குற்றம் சாட்டியது.
இதனால், சீனாவின் பங்குச் சந்தை சுமார் 8 சதவீதம் அளவிற்கு சரிந்தது. வைரஸ் அச்சுறுத்தலுக்கு தீர்வு காண கடந்த 14 நாட்களுக்குள் சீனாவில் இருந்து அமெரிக்கா சென்ற அனைத்து வெளிநாட்டு பிரஜைகளையும், அந்நாடு தடுத்து வைத்து கண்காணித்து வருகிறது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தவும், அதனை எதிர்த்துப் போராடுவதற்கு அமெரிக்காவின் உதவியை வரவேற்பதாக சீனா தெரிவித்துள்ளது. அமெரிக்கா நிர்வாகத்தை பீதி கிளப்புவதாக கூறிய சீன அரசு நிர்வாகம், ஒரு நாள் கழித்து தற்போது அமெரிக்காவின் உதவியை கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது. நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும், நிலைமை சர்வதேச அளவில் மோசமடைந்து வருவதாலும் சீன நிர்வாகம் சர்வதேச உதவிகளை நாடியுள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக, சீன அதிபர் ஜி.ஜின்பிங் நேற்று சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அவசர கூட்டத்தில், அரசாங்கம் சார்பில் சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. அதில், ‘சீன அரசு நிர்வாகம் தொற்றுநோயைத் தடுக்கும் மக்கள் போரை தொடங்கியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க அதற்கு எதிராக போராட வேண்டும். நோய் தடுப்பு நடவடிக்கையில், தங்கள் கடமைகளை புறக்கணிக்கும் அதிகாரிகள் தண்டிக்கப்படுவார்கள்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக நேற்று நள்ளிரவு முதல் இரண்டு நில மற்றும் கடல் எல்லைகளை தவிர மற்ற அனைத்தையும் மூடுவதாக ஹாங்காங்கின் தலைமை நிர்வாகி கேரி லாம் அறிவித்தார். சீனாவுடனான எல்லையை முழுமையாக மூடக் கோரி மருத்துவமனை தொழிலாளர் சங்கங்கள் வெளிநடப்பு செய்வதாக அச்சுறுத்தியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாயை பொறுத்தவரை, கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, சுகாதாரம், கப்பல் போக்குவரத்து, வெளிவிவகாரங்கள், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் உள்துறை அமைச்சகங்கள் சார்பில் குழு நியமிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் பூரி, வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி, சுகாதார இணை அமைச்சர் அஸ்வனி குமார் சவுபே மற்றும் கப்பல் துறை இணை அமைச்சர் மன்சுக் லால் மண்டவியா ஆகியோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், கேரளாவில் கொரோனா வைரசால் பதிவான மூன்று வழக்குகள், மாநில பேரிடர் அறிவிப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது.
நோய்தொற்று பரவாமல் இருக்க முன்ெனச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அந்தந்த துறைகள் ஒருங்கிணைக்கப்பட்டு, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்த ஆலோசனைகள் வழங்கப்பட்டன. முன்னதாக, வைரஸ் பரவலை தடுக்க இ-விசா வசதிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. சீனாவுக்கான பயணத்தைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டது. மேலும், சீன பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கான இ-விசா வசதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டும், ஏற்கனவே சீன நாட்டினருக்கு வழங்கப்பட்ட இ-விசாவும் தற்காலிகமாக செல்லுபடியாகாது என்றும் அறிவிக்கப்பட்டது. ேமலும், நாட்டிலுள்ள 21 விமான நிலையங்கள், சர்வதேச துறைமுகங்கள் மற்றும் நாட்டின் எல்லை மாநிலங்களில் சோதனையை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டது.
வவ்வால் போல் கொரோனா
கொரோனா வைரஸ் பரவலுக்கு வவ்வால்கள் காரணமாக இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்ததாக சீன விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். ஷி ஜென்-லி மற்றும் வூஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி விஞ்ஞானிகள், ஏழு நோயாளிகளின் மரபணு வரிசைமுறைகள் பேட் கொரோனா வைரசுக்கு 96 சதவீதம் ஒத்து இருப்பதாக தெரிவித்தனர். ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ‘சார்ஸ்’ ெதாற்று நோய் பரவல் வவ்வால்களில் இருந்து தோன்றியதாக கூறப்பட்டது. தற்போது, ஆய்வு தகவல்கள் அதனுடன் ஒத்து போவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். வூஹானில் ஒரு கடல் உணவு சந்தையில் கொரோனா வைரஸ் தொடங்கியதாக ஏற்கனவே சீன விஞ்ஞானிகள் கூறியது குறிப்பிடத்தக்கது.
செல்போன் நிறுவனம் மூடல்
கொரோனா வைரஸ் பாதிப்பு அச்சத்தின் மத்தியில் சீனாவில் இயங்கிவரும் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கோ நிறுவனம், தங்களது முதன்மை கடையை தற்காலிகமாக மூடுவதாக அறிவித்தது. ஷாங்காய் நகரத்தில் தலைமை நிர்வாகம் செயல்பட்டு வந்த நிலையில், ஸ்மார்ட்போன்கள் முதல் டேப்லெட்டுகள் வரை பல்வேறு தயாரிப்புகளை விற்பனை செய்கிறது. வைரஸ் பரவலுக்கு மத்தியில் சீனாவின் பிரதான நகரங்களில் உள்ள அனைத்து சில்லறை கடைகளையும் கார்ப்பரேட் அலுவலகங்களையும் மூடுவதாக ஆப்பிள் இன்க் நிறுவனம் அறிவித்தது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால், உலகளாவிய ஸ்மார்ட்போன் வழங்கல் மற்றும் தேவைக்கு பெரும் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாக, தொழில் நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர். ஸ்மார்ட்போன்களின் உலகளாவிய ஏற்றுமதி இந்த ஆண்டு எதிர்பார்த்ததை விட 2 சதவீதம் குறைவாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹாங்காங்கில் 2வது பலி
சீன மக்கள் குடியரசின் கீழ் உள்ள ஹாங்காங், இன்று வைரசால் முதல் இறப்பைப் பதிவு செய்துள்ளது. ஏற்கனவே, ஒரு இறப்பு புகாரை சீனா அல்லாத நாடாக பிலிப்பைன்ஸ் அறிவித்தது. உலகெங்கிலும் இறந்தவர்களின் எண்ணிக்கை 427 பேரை தொட்டுள்ள நிலையில், 653 நோயாளிகள் தொற்றுநோயிலிருந்து மீண்டுள்ளதாக மதிப்பிடப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவுக்குப் பிறகு, ஜப்பான் அதிகபட்ச வழக்குகள் (20), தாய்லாந்து (19); சிங்கப்பூர் (18); ஹாங்காங் மற்றும் தென் கொரியா (தலா 15); ஜெர்மனி மற்றும் ஆஸ்திரேலியா (தலா 12); அமெரிக்கா (11); தைவான் (தலா 10), மீதமுள்ள நாடுகளுடன் ஒற்றை இலக்கங்களில் உள்ளன. இந்தியாவுக்கு வெளியேயும் ஆசியாவின் பிற பகுதிகளிலும் மலேசியா, மக்காவோ மற்றும் வியட்நாமில் தலா எட்டு வழக்குகள் உள்ளன; ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (5); இலங்கை, நேபாளம் மற்றும் கம்போடியாவில் தலா ஒன்று என்று கணக்கிடப்பட்டுள்ளது.