5 லட்சம் பேரை வரவேற்க ஏற்பாடுகள் தயார்: தஞ்சை பெரிய கோயிலில் நாளை குடமுழுக்கு...சிறப்பு ரயில், பஸ்கள் மூலம் பக்தர்கள் குவிகின்றனர்
2/4/2025 2:20:20 PM
தஞ்சை: தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழா நாளை கோலாகலமாக நடைபெறுகிறது. விழாவில் 5 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறப்பு பஸ், ரயில்கள் இன்று முதல் இயக்கப்படுகிறது. இதனால் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழா 23 ஆண்டுகளுக்கு பின்னர் நாளை (5ம்தேதி) காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் நடைபெறுகிறது. இதற்கான பூர்வாங்க பூஜைகள் கடந்த மாதம் 27ம் தேதி துவங்கியது.அடுத்ததாக 1ம் தேதி யாகசாலை பூஜைகள் துவங்கியது. இதற்காக 11,900சதுர அடி பரப்பில் 110 யாக குண்டங்கள் கோயிலுக்கு வெளியே உள்ள மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இன்று காலை 6ம் கால யாகசாலை பூஜை நடந்தது.
குருமூர்த்தி சிவாச்சாரியார், சுந்தரமூர்த்தி சிவாச்சாரியார், தர்பாரண்ய சிவாச்சாரியார், ஞானமணி சிவாச்சாரியார் ஆகியோர் தலைமையில் 400க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்களும், ஓதுவார்களும் கலந்து கொண்டு ஹோமம் நடத்தி வருகிறார்கள். மாலை 5 மணி முதல் 8 மணிவரை 7ம் கால யாகசாலை பூஜை நடைபெற உள்ளது.நாளை (5ம் தேதி) அதிகாலை 4.30 மணிக்கு 8வது யாகசாலை பூஜைகள் நடக்கிறது. 7 மணிக்கு மகா தீபாராதனையும், காலை 7.25 மணிக்கு கடம் புறப்பாடும் நடைபெற உள்ளது. தொடர்ந்து காலை 9.30 மணிக்கு அனைத்து விமானம் மற்றும் ராஜகோபுரத்திற்கு குடமுழுக்கும், 10 மணிக்கு பெருவுடையார், பெரியநாயகி மற்றும் அனைத்து மூலவர்களுக்கும் குடமுழுக்கும் நடக்கிறது. மாலை 6 மணிக்கு பெரியநாயகி, பெருவுடையாருக்கு அபிஷேகமும், இரவு 8 மணிக்கு பஞ்சமூர்த்திகள் திருவீதி உலாவும் நடக்கிறது.
குடமுழுக்கின்போது 5 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் கோயிலில் விஐபிக்களுக்கு தனியாக 9 அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வெளியில் நின்று குடமுழுக்கை பார்க்கும் பக்தர்கள் நிகழ்ச்சிகளை தெளிவாக காண்பதற்காக கோயிலை சுற்றிலும் ராட்சத எல்இடி டிவிக்கள் வைக்கப்பட்டு உள்ளன. குடமுழுக்கை முன்னிட்டு திருவாரூர், திருச்சி, நாகை உள்ளிட்ட இடங்களில் இருந்து தஞ்சைக்கு இன்றும், நாளையும் சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகிறது. தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து இன்று முதல் சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகிறது. இதனால் தஞ்சையில் உள்ள அனைத்து லாட்ஜ்களும் நிரம்பி வழிகிறது.
குடமுழுக்கு விழாவை முன்னிட்டு நாளை தஞ்சை மாவட்டத்திற்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. தஞ்சை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.பக்தர்களின் பாதுகாப்பிற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மொத்தம் 300 கண்காணிப்பு கேமராக்கள் மூலம் போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். இதுதவிர 12 தற்காலிக போலீஸ் நிலையங்களும், நகருக்குள் வரும் வாகனங்களை சோதனை செய்ய 12 இடங்களில் சோதனைச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளது. பெரியகோயிலுக்கு செல்லக்கூடிய பக்தர்கள் அனைவரும் பலத்த சோதனைக்கு பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். குடமுழுக்கு பாதுகாப்பு பணியில் 5,500 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கும்பாபிஷேக பாதுகாப்பு பணி குறித்து ஆலோசனை கூட்டம் தஞ்சை எஸ்பி அலுவலகத்தில் தமிழக டி.ஜி.பி. திரிபாதி தலைமையில் நேற்று நடந்தது. பின்னர் டி.ஜி.பி. திரிபாதி கூறுகையில்,‘‘கும்பாபிஷேக தினத்தன்று மட்டும் 5 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய தயார் நிலையில் உள்ளோம். கும்பாபிஷேக விழாவில் ஒவ்வொரு நாளையும் சேர்த்தால் மொத்தம் 10 லட்சம் பேர் வருவார்கள்’’ என்றார்.