வரும் 8ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் டெல்லியில் மீண்டும் ஆம்ஆத்மி ஆட்சி? : கருத்துக் கணிப்பு முடிவில் தகவல்
2/4/2025 2:19:05 PM
புதுடெல்லி: டெல்லியில் வருகிற 8ம் தேதி சட்டப் பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆம்ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று, கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. டெல்லி சட்டப்பேரவை தேர்தல் வரும் 8ம் தேதி நடைபெற உள்ளது. ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. வாக்குப்பதிவுக்கு சில நாட்களே உள்ள நிலையில், தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் 70 உறுப்பினர்களைக் கொண்ட பேரவையில், 54 முதல் 60 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி வெற்றிபெற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. பாஜக 10 முதல் 14 இடங்களையும், காங்கிரஸ் குறைந்தது இரண்டு இடங்களையும் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மக்களவைத் தேர்தலில், 46% பேர் பாஜகவுக்கும் 38% ஆம் ஆத்மிக்கும் வாக்களித்தனர். அவர்களில், மோடி பிரதமராக 75% பேரும், ராகுல் காந்தி பிரதமராக 8% பேரும் கருத்து தெரிவித்து இருந்தனர். குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) விவகாரத்தில், 71% பேர் அரசாங்கம் சரியானதைச் செய்ததாக தெரிவித்துள்ளனர். 52% பேர் ஷாஹீன் பாக் போராட்டத்திற்கு எதிராகவும், 25% பேர் மட்டுமே எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.
மீதமுள்ள 24% பேர் இந்த விவகாரத்தில் எந்தவொரு திட்டவட்டமான கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஐபிஎஸ்ஓஎஸ் கணக்கெடுப்பில் டெல்லி முழுவதிலும் இருந்து தோராயமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 7,321 பேரின் கருத்துகளில் இருந்து முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஜன. 27 முதல் பிப். 1ம் தேதி வரை சமூக-பொருளாதார நிலைகளை அடிப்படையாக கொண்டு கருத்து கணிப்பு நடத்தப்பட்டிருப்பதால், கருத்துக் கணிப்பில் 5% அளவிற்கு வித்தியாசங்கள் இருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.