குடியரசு தலைவர் உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது
1/31/2020 2:22:46 PM
புதுடெல்லி: குடியரசு தலைவர் உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தின. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது. இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரையாற்றினார். இதையடுத்து 2020ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் நாளை (பிப். 1) தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்கிறார். நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 11 ஆண்டுகளில் இல்லாத அளவில் 5 சதவீதமாக குறைந்துள்ள நிலையில் பட்ஜெட் குறித்து மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
மத்திய பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படுவதை முன்னிட்டு நாட்டின் பொருளாதார ஆய்வறிக்கை இன்று வெளியிடப்பட உள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக நாடு முழுவதும் நடை பெறும்போராட்டங்கள், பொருளாதார நிலவரம், காஷ்மீரில் தலைவர்கள் சிறைவைப்பு, வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு உள்ளிட்ட பிரச்னைகளை கூட்டத் தொடரில் எழுப்ப எதிர்க் கட்சிகள் முடிவெடுத்துள்ளன.
இன்று, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பொருளாதார ஆய்வை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அட்டவணைப்படுத்தினார். இதனிடையே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டம் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு நாடாளுமன்ற வளாக நூலக அரங்கில் நடைபெறுகிறது. பாஜகவின் செயற்குழுக்கூட்டமும் இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறுகிறது. முன்னதாக, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தலைமையில், திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு முன்பாக, பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக சிஏஏ மற்றும் என்ஆர்சி-க்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்னதாக நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடி, நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் கூறுைகயில், ‘இது இந்தாண்டின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர். பலனளிக்கக் கூடிய கூட்டத் தொடராக இருக்கும். இந்தக் கூட்டத்ெதாடர் பொருளாதார பிரச்னைகள் குறித்து கவனம் செலுத்தும். பெண்கள், தலித்துகள் மற்றும் நலிந்த பிரிவினருக்காக மத்திய அரசு தொடர்ந்து செயல்படும்” என்றார்.
தொடர்ந்து, இரு அவைகளின் கூட்டுத் ெதாடரில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆற்றிய உரையில் கூறியதாவது: நமது அரசியலமைப்பானது இந்த நாடாளுமன்றத்திலிருக்கும் ஒவ்வொரு உறுப்பினரிடமிருந்தும், நாட்டு மக்களின் நம்பிக்கையையும், தேவையையும் பூர்த்திசெய்து அவர்களுக்கு தேவையான சட்டங்களை உருவாக்கி, தேசிய நலனைப் பாதுகாப்பதை மிக முக்கியமாக வைத்திருக்கிறது. அயோத்தி தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து நாட்டு மக்கள் நடந்துகொண்ட முதிர்ச்சியான முறை பாராட்டுதலுக்குரியது. பரஸ்பர கலந்துரையாடல்கள் மற்றும் விவாதங்கள் மட்டுமே ஜனநாயகத்தை மேலும் பலப்படுத்துகின்றன. அதேநேரத்தில், எதிர்ப்பு மற்றும் போராட்டம் என்ற பெயரில் நடைபெறும் எந்தவொரு விதமான வன்முறையும் சமூகத்தையும், நாட்டையும் பலவீனப்படுத்துகிறது. இரு அவைகளாலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை மூலம் அரசியலமைப்பின் 370வது பிரிவு மற்றும் 35 ஏ பிரிவு ரத்து செய்யப்பட்டது வரலாற்று ரீதியானது மட்டுமல்லாமல், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளின் சம வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளது.
குருநானக் 550வது ஜெயந்தியை முன்னிட்டு கர்தார்பூர் வழித்தடம் குறுகிய காலத்தில் வெற்றிகரமாக ஏற்படுத்தி நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இரு அவைகளாலும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தியதன் மூலம் மகாத்மா காந்தியின் விருப்பம் நிறைவேறியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். குடியுரிமை திருத்தச் சட்டம் மூலம், அனைவருக்கும் சம உரிமைகளை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பு. ஆயுஸ்மான் திட்டத்தின் கீழ் 50 கோடி மக்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 24 கோடி மக்கள் காப்பீட்டு திட்டங்களால் பயனடைந்துள்ளனர். 2.5 கோடி மக்களுக்கு இலவச மின்சார இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் உரையில் குறிப்பிட்டார்.