சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் முன்னாள் நீதிபதிகள் பேரணி நடத்தியது துரதிஷ்டவசமானது: தலைமை நீதிபதி வேதனை
1/31/2020 2:20:11 PM
சென்னை: சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் முன்னாள் நீதிபதிகள் பேரணி நடத்தியது துரதிஷ்டவசமானது என தலைமை நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார். சிஐஎஸ்எப் பாதுகாப்பை சென்னை உயர் நீதிமன்ற வளாகம் முழுமைக்கும் அமல்படுத்த கோரிய வழக்கு இன்று தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி ஏ.பிசாஹி, ‘தியாகிகள் நாளையொட்டி சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் அமைதி ஊர்வலம் நடத்தப்பட்டது ஏற்க கூடியதல்ல. இதில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஹரிப்பரந்தாமன், கண்ணன் ஆகியோர் பங்கேற்றது வேதனை அளிக்கிறது. இது நீதிமன்றத்திற்கு மிகப்பெரிய பாதிப்புகளை உருவாக்கும். ஓய்வு பெற்ற நீதிபதிகள் பங்கேற்றதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது இவ்வாறு நீதிமன்ற வளாகத்திற்குள் பேரணியில் பங்கேற்றது நீதிபதிகள் மாண்பை சீர்கெடுக்கும் செயலாக உள்ளது.
நீதிமன்றத்திற்கு இந்த பேரணியின் போது பிரச்சனை நிகழ்ந்திருந்தால் யார் மீது வழக்குப்பதிவு செய்வது? நீதிமன்றம் பொது சொத்து, தனி நபர்களானது அல்ல என்பது ஓய்வு பெற்ற நீதிபதிகள் உணர்ந்து செயல்பட வேண்டும். நீதிபதிகளாக இருந்தவர்கள் ஓய்வு பெற்ற பிறகும் நீதிபதிகளாக கருதப்படுவர். அவ்வாறு இருக்க வேண்டியவர்கள் நீதிமன்றத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயல்படலாமா? இதை மன்னிக்கவே முடியாது. போராட்டம் பேரணி நடத்துவதற்கான இடம் நீதிமன்றம் இல்லை. நீதிமன்ற வளாகத்தில் அத்துமீறி முன்னாள் நீதிபதிகள் ஹரிப்பரந்தாமன், கண்ணன், அக்பர் அலி ஆகியோர் பேரணி நடத்தியது குறித்து நீதிமன்ற பாதுகாப்பு குழு விசாரிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.
மத்திய அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் வாதிடும்போது, ‘சென்னை உயர் நீதிமன்றத்திற்கு பாதுகாப்பு இல்லை. வழக்கறிஞர்கள் போர்வையில் நக்சல்கள் அதிகரித்து வருகின்றனர். அவர்களை நீதிமன்றத்திற்கு வரவிடாமல் தடுக்க முடியவில்லை. இது மட்டுமல்லாமல் நீதிமன்ற வளாகத்திற்குள் மது குடிப்பது போன்ற சட்ட விரோத நடவடிக்கைகளும் அதிகரித்துள்ளது. எனவே சென்னை உயர் நீதிமன்ற வளாகம் முழுமைக்கும் சிஐஎஸ்எப் பாதுகாப்பை விரிவுபடுத்த வேண்டும்’ என்றார்.
இதையடுத்து, தலைமை நீதிபதி, ‘சென்னை உயர் நீதிமன்றம் முழுமைக்கும் சிஐஎஸ்.எப் பாதுகாப்பை நிரந்தரமாக வழங்குவது தொடர்பாக நீதிமன்ற பாதுகாப்பு குழு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டு வழக்ைகமார்ச் 2ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.