சிறப்பு பூஜைகளுடன் தஞ்சை பெரியகோயில் கோபுரத்தில் தங்க கலசம் பொருத்தப்பட்டது: பிப்ரவரி 5ல் குடமுழுக்கு விழா
1/30/2020 3:48:57 PM
தஞ்சை: தஞ்சை பெரியகோயில் கோபுரத்தில் தங்க முலாம் பூசப்பட்ட கலசம் இன்று பொருத்தப்பட்டது. இதையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. தஞ்சை பெரியகோயில் குடமுழுக்கு வரும் பிப்ரவரி 5ம் தேதி காலை 9 மணி முதல் 10 மணிக்குள் நடக்கிறது. இதையொட்டி 1ம் தேதி பிற்பகல் யாகசாலை பிரவேசம் நடக்கிறது. அதைத்தொடர்ந்து 5ம் தேதி காலை வரை யாகசாலை பூஜைகள் நடக்கிறது. குடமுழுக்கையொட்டி கடந்த 27ம் தேதி கோயிலில் புதிய கொடிமரம் நடப்பட்டது. கோயில் கோபுரத்தில் உள்ள கலசம் கீழே இறக்கப்பட்டு தங்க முலாம் பூசி திருப்பணிகள் செய்யப்பட்டன. இன்று காலை 10 மணிக்கு சிறப்பு பூஜையுடன் கலசம் மீண்டும் கோபுரத்தில் பொருத்தப்பட்டது.
பின்னர் அங்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. குடமுழுக்கையொட்டி கோயில் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. மேலும், தஞ்சை நகரம் முழுவதும் இப்போதே பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில், தீயணைப்புத்துறை டிஜிபி சைலேந்திர பாபு தஞ்சை பெரிய கோயிலுக்கு இன்று காலை 50 தீயணைப்பு வீரர்களுடன் வந்தார். அங்கு செய்யப்பட்டுள்ள தீத்தடுப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். பின்னர் மேலும் சில இடங்களில் தீத்தடுப்பு கருவிகள் பொருத்தவும் ஆலோசனைகள் வழங்கினார்.
சிறப்பு பஸ்கள்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்ட பொதுமேலாளர் ஜெயராஜ் நவமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கும்பாபிஷேகத்தையொட்டி வரும் 4, 5ம் தேதிகளில் தஞ்சைக்கு 205 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ்கள் திருச்சி, நாகை, வேளாங்கண்ணி, திருவாரூர், மயிலாடுதுறை, கும்பகோணம், வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, பட்டுக்கோட்டை, பேராவூரணி, புதுக்கோட்டை, மதுரை, அறந்தாங்கி, அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய இடங்களில் இருந்து இயக்கப்படும். பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பெரம்பலூர், சிவகங்கை மாவட்டங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.