மக்களவையில் கடுமையான விவாதத்துக்கு பின் நள்ளிரவில் குடியுரிமை மசோதா நிறைவேற்றம்...ஆதரவு 311; எதிர்ப்பு 80...வடகிழக்கு மாநிலங்களில் ‘பந்த்’
12/10/2025 2:53:55 PM
புதுடெல்லி: மக்களவையில் நேற்றிரவு கடுமையான விவாதத்துக்கு பின்னர், குடியுரிமை மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆதரவாக 311 உறுப்பினர்களும், எதிராக 80 உறுப்பினர்களும் வாக்களித்தனர். மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வடகிழக்கு மாநிலங்களில் இன்று காலை முதல் 11 மணி நேர முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது. கடந்த 1955ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட குடியுரிமைச் சட்டத்தின்படி, அண்டை நாடான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து குடிபெயர்ந்து 12 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வசிக்கும் இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், சமணர்கள், பார்சி இனத்தவர், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், திருத்தப்பட்ட குடியுரிமை மசோதாவை, மக்களவை ேதர்தலுக்கு முன் கடந்த ஜனவரி மாதம், பாஜ அரசு மக்களவையில் நிறைவேற்றியது. எனினும், மாநிலங்களவையில் பலம் குறைந்து இருந்ததால் நிறைவேற்றப்படவில்லை.
அதற்குள் 16வது மக்களவையின் பதவிக்காலம் முடிவுக்கு வந்து விட்டதால் இந்த மசோதா காலாவதியாகிவிட்டது. பாஜ தலைமையிலான கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்ததால், தற்போது இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி, மேற்கண்ட விதிமுறைகளின்படி குறைந்தது 5 ஆண்டுகள் இந்தியாவில் வசித்தாலே அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்று திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதிக்கு முன் குடியேறியவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்றும் இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த மசோதா முஸ்லிம் சமூகத்தினருக்கு எதிராக இருப்பதாகக் கூறி, காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ்வாதி, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
மேலும், இந்த மசோதாவால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடும் என்று வடகிழக்கு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்நிலையில், நேற்று மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மசோதாவை தாக்கல் செய்து, மசோதாவில் கூறப்பட்ட அம்சங்கள் குறித்து, எம்பிக்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். இதனால், காரசாரமான விவாதங்களும், எதிர்ப்புக் குரல்களும் எழுந்ததால் மக்களவையில் சிறிது நேரம் அமளி ஏற்பட்டது. பின்னர், காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், மசோதாவை தாக்கல் செய்வது தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், அரசுக்கு ஆதரவாக 293 எம்பிக்களும், எதிராக 82 எம்பிக்களும் வாக்களித்தனர்.
இதையடுத்து, மசோதாவை அமித் ஷா தாக்கல் செய்தார். மசோதாவுக்கு அதிமுக, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. விவாதம் இரவு 12 மணி வரை நீடித்தது. தொடர்ந்து நள்ளிரவு 12.05 மணிக்கு மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது மசோதாவுக்கு ஆதரவாக 311 உறுப்பினர்களும், எதிராக 80 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இதையடுத்து குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், குடியுரிமை திருத்த மசோதாவை எதிர்த்து, வடகிழக்கு பிராந்திய மாணவர்களின் அமைப்புகளின் சார்பில், 11 மணி நேர முழு அடைப்பு போராட்டம் இன்று அதிகாலை 5 மணிக்கு தொடங்கியது. மசோதாவுக்கு எதிராக பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் வடகிழக்கு மாணவர் அமைப்பு சார்பில் (நேசோ) மாலை 4 மணி வரை முழு அடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதனால், அசாம், அருணாசல பிரதேசம், மேகாலயா, மிசோரம் மற்றும் திரிபுராவில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆனால், ஹார்ன்பில் விழாவை முன்னிட்டு, நாகாலாந்துக்கு, ‘பந்த்’ வரம்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ், அனைத்து அசாம் மாணவர் சங்கம், கிருஷக் முக்தி சங்கிராம் சமிதி, அனைத்து அருணாசல பிரதேச மாணவர் சங்கம், காசி மாணவர் சங்கம் மற்றும் நாகா மாணவர் கூட்டமைப்பு போன்ற கட்சிகளும், அமைப்புகளும் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. கவுகாத்தி பல்கலைக்கழகம், திப்ருகார் பல்கலைக்கழகம் ஆகியவை நாளை நடத்த திட்டமிட்டிருந்த அனைத்து தேர்வுகளையும் ஒத்திவைத்துள்ளன. இன்றைய முழு அடைப்பு போராட்டத்தால், வடகிழக்கு மாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் மத்திய அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருவதால், அப்பகுதிகளில் பதற்றமான நிலை நீடிக்கிறது.
‘இன்னர் லைன் பெர்மிட்’
மக்களவையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘‘குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவைக் கொண்டு வருவதால் வடகிழக்கு மாநில மக்களின் நலன் பாதிக்கப்படாது. அரசமைப்புச் சட்டத்தின் 6வது அட்டவணையின் கீழ் அசாம், மேகாலயா, மிசோரம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் பழங்குடியினர் வசிக்கும் பாதுகாக்கப்பட்ட வரம்புக்கு உள்பட்ட பகுதிகளுக்கு இந்த மசோதாவில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அருணாசலப் பிரதேசம், நாகாலாந்து, மிசோரம் ஆகிய மாநிலங்களில் நுழைவு அனுமதி (இன்னர் லைன் பெர்மிட்) மூலம் பாதுகாக்கப்பட்டு வரும் பகுதிகளுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதில், மணிப்பூர் மாநிலமும் இணைக்கப்படவுள்ளது. வடகிழக்கு மாநில மக்களின் கலாசாரத்தையும், பாரம்பரியத்தையும் பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. அதனால், மக்கள் அச்சப்பட வேண்டாம்’’ என்றார்.
அவையில் இல்லாத மோடி
குடியுரிமை சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் நிறைவேறியதற்கு பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அவரது ட்விட்டர் பக்கத்தில், ‘குடியுரிமை சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் நிறைவேறுவதற்கு ஆதரவு அளித்த பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவின் பாரம்பரியத்துக்கும், மனிதநேயத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. மசோதா மீதான விவாதத்தின்போது உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு விரிவாக பதிலளித்த அமித் ஷாவுக்கு எனது பாராட்டு’ என்று பதிவில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், மக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்படும்போது பிரதமர் மோடி அவையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மசோதா நகல் கிழிப்பு
குடியுரிமை மசோதா மீதான விவாதத்தின்போது, அகில இந்திய மஜ்லிஸ் கட்சி எம்.பி. அஸாதுதீன் ஒவைசி, தன்னிடம் இருந்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவின் நகலை திடீரென எழுந்து நின்று கிழித்தார். அப்போது அவர், ‘தென் ஆப்பிரிக்காவில் குடியுரிமை வழங்குவதில் பாகுபாடு காட்டியதன் காரணமாக, குடியுரிமை அட்டையை மகாத்மா காந்தி கிழித்தெறிந்தார்’ என்றார். அவரது செயல், நாடாளுமன்றத்தை அவமதிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி ஆளும் கட்சி உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்தனர். தொடர்ந்து ஒவைசி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘நள்ளிரவில் நாடே உறங்கி கொண்டிருந்த வேளையில், இந்தியாவின் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் தொடர்பான கொள்கைகளுக்கு துரோகம் விளைவிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து நான் கடுமையாக போராடினேன். இனியும் இந்த போராட்டம் ஓயாது என ஒவ்வொரு இந்தியனுக்கும் நான் உறுதியளிக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.