திருப்போரூர் அருகே பரபரப்பு: அடகு கடைக்காரரை துப்பாக்கியால் மிரட்டி நகைகள், பணம் கொள்ளையடிக்க முயற்சி
12/9/2025 3:50:20 PM
திருப்போரூர்: திருப்போரூர் அருகே அடகு கடைக்காரரை துப்பாக்கியால் மிரட்டி நகைகள், பணம் கொள்ளையடிக்க முயன்ற 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். கூடுவாஞ்சேரியில் வசித்து வருபவர் விமல்சந்த் ஜெயின் (45). இவர், திருப்போரூரில் இருந்து கூடுவாஞ்சேரி செல்லும் சாலையில் நெல்லிக்குப்பத்தில், கடந்த 20 வருடங்களாக அடகு கடை நடத்தி வருகிறார். அதனுடன் சிறிய அளவில் நகை கடையும் நடத்தி வருகிறார். நெல்லிக்குப்பம், அகரம், கீழூர், தர்மாபுரி, அம்மாப்பேட்டை, காட்டூர், கல்வாய் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள், தங்களது நகைகளை இவரது கடையில் அடகு வைத்து வட்டிக்கு பணம் பெற்று செல்வார்கள்.
இந்நிலையில் நேற்றிரவு 8.30 மணியளவில் விமல்சந்த், கடையில் இருந்தபோது, பைக்கில் 3 பேர் வந்தனர். அவர்கள் முகத்தில் கர்சீப் கட்டியிருந்தனர். கடையின் முன்பு பைக் நிறுத்தி விட்டு, திடீரென மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து விமல்சந்தை மிரட்டி பணம், நகைகளை கேட்டனர். இதில் சுதாரித்து கொண்ட விமல் சந்த், தனது இருக்கையின் அருகே பொருத்தி வைத்திருந்த அலார பட்டனை அழுத்தினார். சத்தம் கேட்டு அருகிலுள்ள கடைகளில் அமர்ந்திருந்தவர்கள் அடகு கடையை நோக்கி ஓடி வந்தனர். இதை சற்றும் எதிர்பாராத 3 பேரும், பொதுமக்கள் மீது துப்பாக்கியை காட்டி மிரட்டியபடி பைக்கில் தப்பி சென்றனர். உடனே திருப்போரூர் மற்றும் காயார் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர், கடையில் பொருத்தப்பட்டிருந்த கேமரா பதிவுகளை வைத்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மேலும் செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணன், மாமல்லபுரம் கூடுதல் எஸ்.பி. சுந்தரவதனம் ஆகியோர் பார்வையிட்டனர்.
கடந்த சில மாதங்களாக திருப்போரூர், கேளம்பாக்கம், நாவலூர் உள்ளிட்ட ஓ.எம்.ஆர்., ஈ.சி.ஆர். பகுதிகளில் துப்பாக்கி கலாச்சாரம் தலையெடுத்துள்ளது. பிரதமர் மோடி- சீன அதிபர் வருகையின்போது தாழம்பூர் காவல் நிலைய எல்லையில் துப்பாக்கியுடன் பதுங்கியிருந்து ராமநாதபுரத்தை சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டனர். அதேபோன்று கடந்த மாதம் வேங்கடமங்கலம் பகுதியை சேர்ந்த பாலிடெக்னிக் மாணவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டான். தற்போது நெல்லிக்குப்பம் அடகு கடையில் 3 வாலிபர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டி உள்ளனர். சென்னையை ஒட்டிய புறநகர் பகுதியில் துப்பாக்கி வைத்திருக்கும் நபர்களை கண்டு பிடிக்க முடியாமல் போலீசார் விழி பிதுங்கி உள்ளனர். இவர்களுக்கு துப்பாக்கி சப்ளை செய்வது யார், வட மாநில கொள்ளையர்களா அல்லது உள்ளூர் கொள்ளை கும்பலா என்று போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
2 முறை முயற்சி
கொள்ளை முயற்சி நடைபெற்ற இந்த அடகு கடையில் ஏற்கனவே 2 முறை கொள்ளை முயற்சி நடந்துள்ளது. ஒரு முறை சுவரை துளை போட்டு கொள்ளை முயற்சி நடந்தது. இதையடுத்து கேமரா, அலாரம் போன்றவற்றை பொருத்தினார். பின்னர் மற்றொரு முறை நடைபெற்ற கொள்ளை முயற்சியில் அலாரம் அடித்ததால் கொள்ளையர்கள் தப்பிச் சென்றனர். இரு சம்பவங்களிலும் ஈடுபட்ட கொள்ளையர்கள் இதுவரை பிடிபடவில்லை என்று குறிப்பிடத்தக்கது.