காவல்நிலையம் எதிரே இளம்பெண்ணை குத்தி கொல்ல முயன்ற போலீஸ்காரர்
12/9/2025 3:15:37 PM
கடையம்: காவல்நிலையம் எதிரிலேயே இளம்பெண்ணை கத்தியால் குத்திக் கொல்ல முயன்ற போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் ஆத்துச் சாலையைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (38). இவர் வீரவநல்லூர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டரின் டிரைவராக உள்ளார். இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளன. கடையத்தைச் சேர்ந்த விநாயகம் மகள் முப்பிடாதி சக்தி(30). கணவரைப் பிரிந்த இவர் 2 மகள்களோடு கடையம் காவல்நிலையம் எதிரேயுள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். 4 ஆண்டுகளுக்கு முன் தட்சிணாமூர்த்தி கடையத்தில் வேலை செய்த போது முப்பிடாதியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தற்போது வீரவநல்லூரில் பணியாற்றி வந்த போதும் அவர்களுக்குள் தொடர்பு நீடித்துள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக இருவருக்கிடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாள்களுக்கு முன் தட்சிணாமூர்த்தி கடையத்திற்கு சென்று முப்பிடாதியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். நேற்று இரவு 7 மணியளவில் கடையம் வந்த தட்சிணாமூர்த்திக்கும், முப்பிடாதிக்கும் மீண்டும் தகராறு ஏற்படவே மறைத்து வைத்திருந்த கத்தியால் முப்பிடாதியை தாக்கினார். இதில் கழுத்து, தலையில் பலத்தக்காயம் ஏற்பட்டது. கடையம் காவல்நிலையம் எதிரே இந்த சம்பவம் நடந்தது. படுகாயம் அடைந்த முப்பிடாதி தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தகவலறிந்த ஆலங்குளம் டிஎஸ்பி ஜாகிர்உசேன் மற்றும் கடையம் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார். இதுகுறித்து வழக்குப்பதிந்து தப்பியோடிய தட்சிணாமூர்த்தியை கைது செய்தனர். காவல் நிலையம் எதிரே இளம்பெண்ணை போலீஸ்காரர் ஒருவர் கத்தியால் குத்தி கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்பட்டது.